தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

நடுகல் : ஈழத்தின் மனசாட்சி! - செ. சண்முகசுந்தரம்

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவல் விமர்சனத்தின் ஒரு பகுதி  இன்றைய தமிழ் இந்துவில் வெளிவந்தது. முழு விமர்சனம் மானுடம் இதழில் வெளிவந்தது.        

                              

   1990 களின் தொடக்கத்திலிருந்து, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின்  ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌, முப்பது ஆண்டு  காலவெளியில் பயணிக்கிறது நாவல். இக்காலகட்டமே ஈழ மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை தங்கள் சொந்த நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்த காலம், ஏதிலிகளாய் உலகெங்கும் ஈழத்தமிழர்களை அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம், உலக மக்கள் தங்கள் மனசாட்சியைக் கொன்றொழித்த காலம், ஈழமக்கள் இன்னமும் அடிமைகளாய் உலவிக் கொண்டிருக்கும் காலம். இக்காலத்தினூடே புகழ்பெற்று விளங்கிய  புலிகளின் நிர்வாகத் திறமையை,  தாய் நாட்டிற்காக புலிகள் இயக்கம் நடத்திய‌ போரின் துன்பங்களை, ஈழத்தின் இயற்கை வளத்தை, தாய்மண்ணின் பண்பாட்டுக் கலாச்சாரத்தை நாவல் தேவையான அளவுக்கு பேசிச் செல்கிறது.

      யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில், கொடும் துன்பத்தை அனுபவித்த ஈழத் தமிழ்மக்களின் ஆழ்மனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உளவியில் கூறுகளை நாவல் வெளிக்கொணர்கிறது. தமிழ் இன அழிப்பின் தன்மையை உலகம் இதுவரை கண்டிருக்கவில்லை. பாதுகாப்பு வளையங்களினுள் மக்களை வரச்செய்து, அவர்கள் மேல் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதல்கள், தமிழ் மக்களின் நம்பிக்கைத் தன்மையை அடியோடு குலைத்துப் போட்டுவிட்ட கொடுமை வேறு எங்கும் நடக்காதது. போராளிகளை அழித்துவிட்டோம் என்று கும்மாளமிட்ட சிங்கள ராணுவம், போராளிகளின் பிம்பங்களை, நிழற்படங்களைக் கண்டு அஞ்சுகிறது. தமிழ் இனத்தை பிரதிபலிக்கும் எதுவுமே இலங்கையில் இருக்கக்கூடாது என்ற எண்ணமே,   சிங்கள ராணுவத்தின் ஒவ்வொரு அணுவையும் நிரப்பியிருக்கிறது. 

        முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்த 2009 முதற்கொண்டு, ஈழமக்களின் வாழ்வே தன் வாழ்வாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு வருபவர் ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன். போரின்  வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் அதிர்ச்சிகளை  துன்பியல் கவிதைகளாக்கித் தந்திருப்பவர் தீபச்செல்வன். போர் குறித்த அவரது கவிதை வரிகள் புகழ்பெற்றவை. முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகான சூழலில் தீபச்செல்வனிடம் தோன்றிய மனவெழுச்சிகளை கடந்த காலங்களின் அவருடைய படைப்புகளின் வழி உணரமுடியும். போரினால் துயருற்ற மக்களின் நடுவே காத்திரமான தேடுதலை மேற்கொண்டிருக்கும் அவர், தன் உளவியல் போராட்டத்தினை எழுத்துகளின் வழியே கொண்டுவருவதில்  தவறுவதில்லை. அவருடைய எழுத்துகள் உலக மக்களின் மனசாட்சியைத் தாக்கி நியாயம் கோருபவை. ஆனால் அந்த நியாயம் இன்னமும் உலக சமுதாயத்தால் வழங்கப்படவில்லை.

     நாவலின் நாயகனாக விநோதனையோ அல்லது மாவீரனாகிப் போன அவனுடைய அண்ணன்  வெள்ளையனையோ  குறிப்பிடலாம்.  ஆனால்  வெள்ளையனின் புகைப்படமே அசல் நாயகன். வெள்ளையனின் நினைவாக வீட்டில் இருந்த சில புகைப்படங்களும் கூட‌ முள்ளிவாய்க்கால் போரின்போது அழிந்துபோகிறது. அந்தப் புகைப்படத்தின் தொலைதலும், அழிதலும், அது குறித்த தேடுதல் நினைவுகளும் விநோதனுக்கும், அவன் தாய்க்கும், அவன் தங்கைக்கும் தாங்கவொண்ணா சித்திரவதையைத் தருகிறது. முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடங்கும் வரை கூட,  அப்புகைப்படத்தை பத்திரமாக சேமித்து  வைத்திருந்த தாய், யுத்தத்திற்குப் பின்னர், இடப்பெயர்வுகளின் வலிகளோடு  முள்வேலி முகாம்களில் தனது மகளோடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும்போது, மகன் வெள்ளையனின் புகைப்படத்துக்காக ஏங்கித் தவிப்பது ஒரு காவியமே. வெள்ளையனின் புகைப்படம் மட்டுமல்ல, வேறு எந்த மாவீரரின் புகைப்படத்தையும் ஈழ மக்கள் வணங்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை சிங்கள ராணுவம் கொண்டிருக்கிறது. புலிகளின் மீதான பயத்தினால்தான் முள்ளிவாய்க்கால் போரை அவர்கள் இந்தியாவோடும், பாகிஸ்தானோடும், சீனாவோடும், அமெரிக்காவோடும், இன்ன பிற‌ சர்வதேச நாடுகளோடும்  சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தினார்கள். 
   
   இனவாத சிங்கள அரசு உலக நாடுகளின் உதவியுடன், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதவியுடன், முள்ளிவாய்க்காலில் நடத்திக் காட்டிய ஊழித் தாண்டவம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நினைவுகளிலிருந்து இன்னமும் அகல மறுக்கிறது. யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில், கொடும் துன்பத்தை அனுபவித்த ஈழத் தமிழ்மக்களின் ஆழ்மனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உளவியில் கூறுகளை நாவல் வெளிக்கொணர்கிறது. இந்த இன அழிப்பின் தன்மை உலகம் இதுவரை கண்டிராதது. பாதுகாப்பு வளையங்களினுள் மக்களை வரச்செய்து, அவர்கள் மேல் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதல்கள், தமிழ் மக்களின் நம்பிக்கைத் தன்மையை அடியோடு குலைத்துப் போட்டுவிட்ட கொடுமை வேறு எங்கும் நடக்காதது. போராளிகளை அழித்துவிட்டோம் என்று கும்மாளமிட்ட சிங்கள ராணுவம், போராளிகளின் பிம்பங்களை, நிழற்படங்களை கண்டு அஞ்சுகிறது. தமிழ் இனத்தை பிரதிபலிக்கும் எதுவுமே இலங்கையில் இருக்கக்கூடாது என்ற எண்ணமே,   சிங்கள ராணுவத்தின் ஒவ்வொரு அணுவையும் நிரப்பியிருக்கிறது. 

   அமெரிக்காவின் 9/11 நிகழ்வுக்குப் பிறகு,  கடந்த இருபது ஆண்டுகளில், உலகில்  இன அழிப்புக்கு உள்ளான  மக்களின் கோருதல்கள் அனைத்தும்,   உலகின் ஒரே அதிகார மையமாக உருவெடுத்திருக்கும்  அமெரிக்க அரசை கிஞ்சித்தும் அசைத்துப் பார்க்கமுடியவில்லை. இம்மக்களின் துயரை விட, அமெரிக்க ஏகாதிபத்தியம்  மட்டுமல்ல, சீனா போன்ற சோசலிச நாடுகள் வகையறாக்களும், ரஷ்யா, இந்தியா போன்ற ஜனநாயக வகையறாக்களும் தங்கள் தங்கள் புவிசார் அரசியலையே முதன்மைப்படுத்தி இயங்கி வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் இன அழிப்புக்கு ஆளான ஈழ மக்கள், தங்களின் அனைத்து உரிமைகளையும் பெற சர்வதேசத்தை தொடர்ந்து நாடும் முயற்சிகளில் இன்னமும் ஈடுபடுவது ஒன்றேதான் வழியாக இருக்கமுடியும். புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்களின் சார்ப்பில் முன்னெடுக்கப்படும் இப்படிப்பட்ட சர்வதேச முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, உள்ளூர அளவில் சிங்கள ராணுவத்தை, சிங்கள மேலாதிக்கத்தை ஆயத உதவியோடு அல்லாமல், சாத்வீக முயற்சிகளில் வழி முறியடிப்பதற்கும், தவறுகளை தட்டிக் கேட்பதற்கும் கிடைத்திருக்கக் கூடிய வலிமை வாய்ந்த நபராக தீபச்செல்வன் இருக்கிறார் என்று உறுதிபடச்  சொல்லமுடியும். தீபச்செல்வனை, அவருடைய குடும்பத்தை அறிந்துகொண்டிருப்பவர்கள் இந்நாவலை எளிதில் உள்வாங்கிக் கொள்ளமுடியும். 
              
         போராளிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் மறைந்துபோன பிறகும்,  பல்லாயிரக்கணக்கான போராளிகளை குற்றுயிராகப் பிடித்து நலன்புரி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட பிறகும், பல நூற்றுக் கணக்கான போராளிகளை காணாமலடித்துவிட்ட பின்னரும்கூட  சீருடை தரித்த போராளிகளின் புகைப்படங்களைக்  காண சிங்கள ராணுவம் அஞ்சுகிறது. தாய் மண்ணுக்காகப் போராடிய புலிகளின் உடலங்கள்  சிதைக்கும், மண்ணுக்கும் கொடுக்கப்பட்டு விட்ட நிலையிலும், இன்னமும் 'புலிகள்'  என்னும் சொற்களுக்காக‌ மிரளுகிறது சிங்கள ராணுவம். மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்படுகின்றன. மாவீரர் தினம் அனுசரிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மாவீரர்களாகிப் போன தங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகளது கல்லறைத் தோட்டங்களை வரிசைக் கிரமமாக அடையாளப்படுத்தி, கண்ணியப்படுத்தி, ஆண்டிற்கு மூன்று முறை  மரியாதை செலுத்தி வரும் ஈழ மக்கள், மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது அதைக் கடுமையாக மீறிய‌, ஈழத்தின் சமீபத்திய‌ நினைவுகளை  நாவல் வெளிப்படுத்துகிறது.  மாவீரர் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கி, அதன் மேல் சிங்கள ராணுவத்தினர் விளையாடும் மைதானமாக உருமாற்றியதை, சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களின் மீது நடத்தும் ஒரு உளவியல் யுத்தமாகவே பார்க்கமுடியும். 

   போராளிகள் தங்களது கட்டமைப்புகளை  தாறுமாறாக  உருவாக்கிக் கொள்ளவில்லை. போர் நடந்து கொண்டிருக்கும்போதும் சரி, அமைதி காலத்திலும் சரி அவர்கள் ஒரு மிகச்சரியான அரசு நிர்வாகத்தை வழிநடத்தினார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளமுடியும். போரின் அவசரகதியிலும் கூட, அப்போர் எளிய மக்களை கடுமையாகப் பாதித்துவிடக் கூடாது என்ற அக்கறை போராளிகளுக்கு இருந்தது. இந்த அக்கறை பயிற்சியினால் கிடைத்ததாகக் கொண்டாலும், அவர்களின் ஆழ்மனத்தில் உருவாகி இருக்கும் உயர்மதிப்பீடுகளின் விளைவே இது. போர் நடக்கப் போகும் இடத்தில் வயதானவர்களின், பெண்களின் வீடுகளைப் பிரித்து, அப்படியே வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது. குடிபெயரும் இடங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது. இவை அனைத்தும் போராளிகளின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. போரில் இறந்துபோகும் போராளிகளின் உடல்களை, மேலும் தங்களுக்கு இழப்பு ஏற்படும் பட்சத்திலும் அதற்கும் துணிந்து, எதிரிகளின் இடத்திலிருந்து பத்திரமாக மீட்டு வருவது, இறந்தவர்களின் உடல்களை போராளிகளின் இல்லங்களுக்கு அனுப்பி வைத்து குடும்பத்தினரை இறுதி மரியாதை செய்ய வைப்பது, மீண்டும் அவ்வுடல்களை மாவீரர் துயிலும் இடங்களில் வரிசைப்படுத்தி அடக்கம் செய்து, மாவீரர்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகளை நடுவது. போராளிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொள்ளும் சிங்கள ராணுவ வீரர்களின் உடல்களை சிங்கள அரசு வாங்க மறுக்கும் சூழல் இருந்த அக்காலங்களில் மாவீரர்களுக்கு கிடைத்த மரியாதை உண்மையில் உயர்வானது, அற்புதமானது, மரியாதைக்குரியது. தங்கள் ராணுவ வீரர்களின் உடல்களைக் கூட வாங்க மறுத்து, பலி எண்ணிக்கையை குறைத்து சொன்ன சிங்கள ராணுவம்தான் இன்று மாவீரர் கல்லறைகளை சேதப்படுத்துகிறது. அக்கல்லறைகளை விளையாட்டுத் திடல்களாக மாற்றிவருகிறது. இதைவிட இனவெறி பிடித்த, வக்கிரம் பிடித்த ஒரு ராணுவத்தினர் வேறு எங்கும் இருந்திருக்க முடியாது, இனியும் இருக்கவும் முடியாது. 

    விநோதனுக்கும் அவன் அண்ணன் வெள்ளையனுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை, தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் வீழ்த்தியது. பத்து வயது முதல், போராளியாவதற்காக வெள்ளையன் எடுக்கும் முயற்சிகள் இயக்கத்தால் தடுக்கப்பட்டு விடுகிறது. முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை, சிறுவர்களை ஆயதபாணியாக்கும் முயற்சிகளை ஈழப் போராட்டத்தின் வரலாற்றில் எங்கிருந்தும் நீங்கள் எடுத்து விடமுடியாது. ஆனால் முள்ளிவாய்க்கால் போர், புலிகளின் இறுதிக்கட்டத்தை நிர்ணயித்ததோடல்லாமல், புலிகளின் அறம் சார்ந்த நடவடிக்கைகளிலும் பெரும் வழுவலை ஏற்படுத்தியது. நேர்மை தவறிய சிங்கள ராணுவ வெறிக்கு எதிராக  அறம் மண்டியிட்டுக் கதறியழுதபோது, தூவானமாய் வீசிய கிபீர் விமானக் குண்டுகள் சமாதான வளையத்தை நாசம் செய்வித்து, ஈழ மக்களின் ரத்த ஆற்றை வற்றாமல் ஓடச்செய்தது. 

   தேசியம், நாடு, மொழி, தேசிய இனம் என்பதெல்லாம் கெட்ட வார்த்தைகளா என்ன? உலகின் நாடுகள் அனைத்தும் எல்லை  மாறா பத்தினிகளாவே இருந்துவிட முடியுமா?  உலக அரசியலை ஆளும் கோட்பாடுகள் அனைத்தும் மாறாதவைகளா என்ன? அடக்கி ஒடுக்கப்பட்டு வாழும் மக்கள் வெடித்தெழுவது தவறு என எந்த மதம் சொல்கிறது? தேசிய இன உரிமைப் போராட்டங்களை, பயங்கரவாதங்கள் என யார் முடிவு செய்வது? உலகின் மனசாட்சி கேலிக்கூத்தாகிப் போனதை  என்று சரி செய்யப் போகிறோம்? 

   வெள்ளையனைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூருவதற்கு  அவர்களின் புகைப்படங்களோ, மாவீரர் துயிலும் இல்லங்களோ இன்று இல்லை.  தங்களுக்குப் பிரியமான கற்களையோ, மரங்களையோதான் ஈழமக்கள், மாவீரர் நினைவாக வழிபடுகிறார்கள். அதையும்கூட மோப்பம் பிடித்து உடைத்தெறிய சிங்கள ராணுவம் தயாராக இருக்கிறது. ஏனென்றால் ஈழம் இப்போது சிங்கள தேசமாம். ஈழத்தின் மனசாட்சியே இந்த நடுகல்.

நன்றி - மானுடம் ஜூன் 2019

செ. சண்முகசுந்தரம், அரை நூற்றாண்டுகளின் கொடும் கனவு என்ற நூலை எழுதியவர்.

திங்கள், 22 ஏப்ரல், 2019

அழிக்க முடியாத நினைவுக்கல்! - வளநாடு சே. சுப்பிரமணியன்




என்னைமுன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். - குறள் 771.

2004ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். டிசம்பர் மாதத்தின் பின்னிரவு அது. நான் ஏற்காட்டில் உள்ள சூசைகிரி பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வெள்ளை நிறத்தாலான பனிப்போர்வைக்குள் முடங்கி, ஏற்காடு மலை நகரமே உறங்கிக் கொண்டிருந்தது. தரைத்தளத்தின் கீழாகத்தான் நான் தங்கியிருந்த அறை இருந்தது. அதில் இருந்த இரண்டு கண்ணாடி சன்னல்களும் மூடப்பட்டு, திரையால் மறைக்கப்பட்டிருந்தன. அறையின் கதவையும் தாழ் போட்டிருந்தேன். முகம் தவிர்த்து, உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் மூடியபடி, வசதியாக கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டேன்.

ஜெயமோகன் எழுதிய ‘சங்கச் சித்திரங்கள்’ என்னும் புதிய நூலை அன்றுதான் வாங்கியிருந்தேன். கெட்டி அட்டையுடன், கவிதா பதிப்பகத்தால் வெயிடப்பட்ட நூல் அது. விகடனில் தொடராக வந்த போதே, அக்கட்டுரைகளில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். என்றாலும், நூல் வடிவில் எல்லாக் கட்டுரைகளையும், மொத்தமாகப் படிப்பது, எப்போதுமே பேரானந்தம் தரக் கூடியது. புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.

சங்கக் கவிதையும், நவீன வடிவில் அதற்கு எழுதப்பட்ட புதுக்கவிதையும், கவிதையின் பொருளை வாழ்வியலோடு இணைத்துச் சொன்ன விதமும் மனதினை ஏதேதோ செய்து கொண்டிருந்தது.

அதிலிருந்த, ‘கல் நின்றவர்’ என்ற கட்டுரையைப் படித்து போது, மேற்கொண்டு படிக்க - மனம் மறுத்து விட்டது. அதிலிருந்த சில வரிகள், மூளைக்குள் சென்று என்னை அரற்றத் தொடங்கின. ’நடுகல்’ என்ற சொல்லை, முதல் முறையாக, அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்.

’களத்தில் முன் நின்று, இன்று கல்லாய் எழுந்து நிற்பவர்களால் தான், சரித்திரம் நிரம்பியிருக்கிறது. அவர்கள் இல்லையென்றால் வரலாறே இருந்திருக்காது. ஆனால், இறந்தவர்கள் முற்றிலும் இறந்தாக வேண்டும். அவர்கள் நினைவுகளும் மட்கி மண்ணாக வேண்டும், இல்லாவிட்டால், இருப்பவர்கள் உயிர் வாழ்வது சிரமம்’ என்ற வரிகள் மனதை நடுங்கச் செய்தன. நடுகல்லாய்ப் போனவர்களை விட, மிஞ்சி இருப்பவர்கள் நாளும் சந்திக்கும் வலியை உணர முடிந்தது.

திடீரென்று, குளிர் பனி அறைக்குள் நுழைந்து கொண்டது. ’வெளியே வா’ என ,என்னை அழைப்பது மாதிரி, கம்பளி தாண்டி உள்ளே வந்து நின்றது. மூளையின் அத்தனை இடுக்குகளிலும் நுழைந்து கொண்ட, ‘நடுகல்’ என்ற சொல்லைப் போலவே, உடலின் ஆயிரமாயிரம் தோல் துவாரங்களின் வழியாகவும் வெண்பனி புகுந்து கொண்டது.

நிறைய காற்றும், ஆசுவாசமும் அப்போது தேவையாய் இருந்தது. அறையிலிருந்து வெளியேறி மேல் தளம் வந்தேன். பனிக் காற்றைத் தவிர அருகில் யாரும் இல்லை. நகர்ப் பகுதியை நோக்கி, பார்வையைத் திருப்பினேன். பீர்பால் கதையில் வருவது போல, தூரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகள் ஏதொவொரு வகையில், உடலுக்கு இதமான சூட்டை வழங்கியபடி இருந்தன. ஒளியால் நிரம்பி வழியும் விளக்குகள், என் மனதுக்கு நம்பிக்கையைத் தந்தன. சற்றே நிம்மதி அடைந்தேன்.

******************************

"அணிமயிற் பீலிசூட்டி பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்..." - புறம் 264.

2019 – புதிய ஆண்டை ஒரு நூல் அறிமுகத்துடன், தொடங்க வேண்டும், அந்த கூட்டத்தை தனது அறையிலேயே வைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னார் வழக்குரைஞர் தமிழ்மணி. ஓரிரு நாள் முன்னதாக, கவிஞர் தீபச்செல்வன் எழுதிய, ’நடுகல்’ என்ற புதிய புத்தகத்தையும் கையில் கொடுத்தார். நடுகல் - வினைத்தொகையாய் பதிந்து விட்ட அந்தச் சொல், ஆற்று மணல் இழுத்துச் செல்வதைப் போல, என்னை உள்ளே இழுத்துச் சென்றது. 200 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து விடத் தூண்டும் வகையில் தான், புத்தகம் எழுதப்பட்டிருந்தது.

இலங்கையில், கிளிநொச்சி அருகில் இருக்கும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனின் நினைவுக் குறிப்புகள் இவை என்று சொல்லலாம். போராட்டத்தில் தனது அண்ணனை இழந்து, தாயையும் தங்கையையும் பிரிந்து அலைந்த ஒரு தம்பியின் துயரக் கதை என்றும் சொல்லலாம். குறிப்பாக இதனை , ஈழப்படுகொலை காலத்திற்கு முன்னும் பின்னுமான 25 ஆண்டு கால இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை சில கதை மாந்தர்களின் வழியே சொன்ன, முக்கியப் படைப்பு என்றும் சொல்லலாம்.

பிரசன்னா, வினோதன் இருவரும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள். இவர்களுக்கு ஒரு தங்கையும் உண்டு. இவர்களது இளம் வயதிலேயே, தந்தை நடராசன் இறந்து விட, தாயின் அரவணைப்பில் வளர்கிறார்கள். தமிழீழத் தாயகத்தை அடைந்து விடும் இலட்சிய வேட்கையோடு இருந்த பிரசன்னா, புலிகள் இயக்கத்தில் சேர்கிறான். இயக்கத்தில் சேர்பவர்களுக்கு புதிய பெயர் ஒன்று வைக்கப்படும். அதன்படி, பிரசன்னாவிற்கு வெள்ளையன் என்ற பெயர் சூட்டப்படுகிறது.

விடுமுறை கிடைக்கும் நாள்களில், தாய், தம்பி மற்றும் தங்கையைப் பார்க்க வீடு வருவான். வெள்ளையன் இயக்கத்தில் சேர்ந்தது ஒரு நேரம் பெருமையாகவும், மற்றொரு நேரம் பதட்டத்தையும் குடும்பத்தாருக்குத் தந்தது. ஒரு சோகமான நாளில், முகமாலைப் பகுதியில் இராணுவத்துடன் நடந்த சண்டையில், மரணத்தைச் சந்திக்கிறான் வீர வெள்ளையன். போரின் பிற்பகுதியில், இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த எல்லா பகுதிகளையும் கைப்பற்றுகிறது. அது எவ்வாறு வெற்றி பெற்றது என்பது, நாம் எல்லாரும் அறிந்ததே.


போருக்குப் பிந்தைய காலத்தில், வினோதனின் தாயும் தங்கையும் முள் வேலி முகாமில் அடைக்கப்படுகிறார்கள். யாழ் நகரில் கல்லூரிப் படிப்பை முடித்த வினோதன், தனது தாயைத் தேடி,முகாமிற்குள் அலைகிறான். இறுதியில் தேடிக் கண்டடைகிறான்.

'மாவீரர்களின் துயில் இல்லம்' பெரும்பகுதி அழிக்கப்படுகிறது. ஒரு பகுதி, இராணுவத்தினரின் விளையாட்டு மைதானமாகிறது. மீதி இடத்தில் எருக்களை மண்டிக் கிடக்கிறது. மாவீரர்களின் நினைவைப் போற்றி நிற்கும் நடுகற்களை அழித்து விட்டதாய் கொக்கரிக்கிறது சிங்கள இராணுவம்.

வினோதனின் தாயோ, தனது மகன் வெள்ளையன் நினைவாக, ஒரு கல்லை கையிலேயே வைத்திருக்கிறாள். அதனைக் குளிப்பாட்டி, துடைத்து விடுகிறாள். பூக்கள் வைத்து விளக்கேற்றுகிறாள். ’பயங்கரவாதியைக் கொண்டாட இங்கே இடமில்லை’ என்று சொல்லி, நினைவுக் கல்லை உடைக்கப் பார்க்கிறான் சிங்க பண்டார. முக்காலமும் இருக்கும் ’நடுகல்லை’, இல்லாமல் செய்ய முடியாது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
************************

“தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே - அன்று
செங்களம் மீதிலே உங்களோடோடிய தோழர்கள் வந்துள்ளோம்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!”
- மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் ஒலிக்கும் பாடல். (நடுகல் - பக்கம் 188)

வெள்ளையன் வீர மரணமடைந்த பத்தாவது ஆண்டில் கதை துவங்குகிறது. வினோதனின் நினைவுகளில் , கால் நூற்றாண்டுக் கதை முன்னும் பின்னுமாகச் சொல்லப்படுகிறது. சிறுவனாக இருக்கும்போதே, சிங்கள விமானத்தின் மீது கல்லெறிந்து துரத்தும் பிரசன்னா, இயக்கத்தில் இணையும் காட்சிகள் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. நாம் சிறுபிராயத்தில் விளையாடிய திருடன் – போலிஸ் விளையாட்டு போல, அங்கே இருந்த ஆமி – இயக்கம் விளையாட்டு, வாசிக்கையில் ரசிக்க வைக்கிறது.


வெள்ளையனாக மாறிய தனது மகனை, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல புலிகள் இயக்க முகாமிற்குச் செல்லும் ஒரு தாயின் வேதனை, புரியும்படி எழுதப்பட்டுள்ளது. அது போலவே, இயக்கம் , வெள்ளையனைத் திருப்பி அனுப்பிய போதும், தமிழீழத் தாயகம் அடைய வேண்டும் என்ற உணர்வுடன் அவன் மீண்டும் இயக்கம் நோக்கிச் செல்வதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இது வெள்ளையனுக்கும் அவனது தாய்க்குமான மனப் போராட்டம் மட்டுமல்ல. ஈழப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு போராளியின் கதையும் இப்படித்தான் இருந்தது என்பதை, கிளைக்கதைகளின் மூலம் உணர வைக்கிறார் தீபச்செல்வன்.

விடுமுறைக்கு வரும் வெள்ளையன் மீது, தாய் காட்டும் அதீத பாசம் நமக்குப் புரிகிறது. தலைக்கு நல்லெண்ணை தேய்த்து விடுவதும், தோசை சுட்டுத் தருவதுமான காட்சிகள் நெழ்ச்சியானவை. நடக்கும் நிகழ்வுகளை அறிந்தும், அறியாமலும் இருக்கின்ற தம்பி, தங்கையோடு வெள்ளையன் பேசிச் செல்லும் பத்திகளும் கனமானவை.

போர் நடைபெற்ற காலத்தில், மக்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஒரு பகுதியிலிருந்து , மற்றொரு பகுதிக்கு மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். வீதியே இடம் பெயரும் மக்களால் நிரம்பியிருந்தது.

“திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையில் சிலர், வீட்டுக்குள் பொருள்களை வைத்துப் பூட்டிவிட்டு வர, வேறு சிலரோ திரும்ப முடியாமலும் ஆகலாம் என்றெண்ணி, வளவு மண்ணைத் தவிர மற்றெல்லாவற்றையும் அள்ளி ஏற்றினர்”, என்ற வரிகள் மனதை பாரமாக்கியது.

அயல் தேசத்திற்கு அகதிகளாகச் செல்லாமல், என்றாவது ஒருநாள், தாய் மண்ணில் நிரந்தரமாகக் குடியேறுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மக்கள், அங்கே எதிர் கொண்ட துயரம் சொல்லில் அடங்காதது. சொந்த நாட்டில் அகதிகளுக்கு உரிய மரியாதை கூட இன்றி, முள் வேலி முகாமிற்குள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

“சனங்களைத் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் முள்வேலி முகாமுக்கு, நலன் புரி நிலையம் என்று பெயர். சொற்களிலேயே வாதை அடர்ந்திருந்தது. மனிதாபிமானப் போர் என்ற பெயரில் இன அழிப்புப் போர். வதை முகாம்களில் இனம் அழிப்பதற்கு புனர் வாழ்வு என்று பெயர். இப்படியாகத்தான் விடுதலைக்காகப் போராடிய இனம் அழிந்து கரைகிறது.” – இந்த பத்தியைப் படித்த போது, அரசியல் நிகழ்வுகள் மனதிற்குள் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.

உலகின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முகாமினைப் பார்வையிட வந்ததும், புனர் வாழ்வு மையங்கள் நன்றாகச் செயல்படுகின்றன என சான்றிதழ் வழங்கியதும் நினைவுக்கு வந்தன. கூடவே, இலங்கை அரசால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளும் மனதில் தோன்றி மறைந்தன. அப்போது, மிருகக்காட்சிசாலை ஒன்றை, பார்வையிடுவதைப் போல, நம்மை பார்த்துச் செல்கிறார்களே என்று முகாம் மக்கள், எண்ணி வருந்தியிருக்கக் கூடும்.

’6 கி.மீ நீளத்தில் உருவாக்கப்பட்டிருந்த உலகின் மிக நீண்ட சிறைச்சாலை அது’ - என தீபச்செல்வன் ஒரு வரியில் சொல்வது, ஓராயிரம் கேள்விக் கணைகளை நிகழ்காலத்தின் மீது வீசிச் செல்கிறது. நேரில் பார்த்து வந்த அரசியல் பார்வையாளர்களும், மெளன சாட்சியாய் இருந்த நிகழ்கால சமூகமும், இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.

”இந்தச் சண்டை எல்லாம் எப்ப முடியும். நாங்க எல்லாம் எங்கடை வீடுகளில் ஒன்றாய் வாழுகிற காலம் எப்ப வரும்?” – ஒரு தாயின் வலி மிகுந்த குரல் இது. போரின் போது, கள்ள அமைதி காத்த உலகம், அவர்கள் யாவரும் ஒன்றாய் வாழுகிற செயலை நியாயமான வழியில் முன்னெடுக்கக் கூடாதா? தரையில் விழுந்த மழை நீர் போல, உடைந்துருகிக் கிடக்கும் அவர்களுக்கு முழு விடியல் எப்போது? தீபச்செல்வனின் நடுகல் கேட்டுக் கொண்டே செல்கிறது.

துணைக்தையாக வரும் அன்ரனி கதாபாத்திரம் மறக்க முடியாதபடி இருந்தது. போரின் போது, இரத்தினாபுரத்திலிருந்து அக்கராயன் பகுதிக்கு இடம் பெயர்ந்திருந்தது அன்ரனியின் குடும்பம். பிரியதர்சன், இசைப்பிரியன், ஈழப்பிரியன், பிரதாபன் என நான்கு பிள்ளைகளும் வயிறார சாப்பிட முடியாத நிலையைக் கண்டு வருந்துகிறான் அன்ரனி. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட தனது காட்டில், விளைந்து கிடப்பவை கண்ணுக்குள் வந்து போகிறது. மனைவி ருக்மணியிடம் சொல்லிவிட்டு, இரவோடு இரவாக இரத்தினாபுரம் சென்று, முடிந்த மட்டும் உணவுப் பொருள்களை எடுத்து வருகிறான். இராணுவத்தின் கண்ணில் படாமல் பொருள்களை எடுத்து வரும் சாகசம் அடிக்கடி நடக்கிறது.

ஒருநாள் பிரியதர்சனும் உடன் வர, தென்னை மரங்களின் மீதேறி காய்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, சிங்கள ராணுவம் இருவரையும் பிடித்து விடுகிறது. எங்களை வேவு பார்க்க வந்தவர்கள் தானே எனக் கேட்டு துன்புறுத்துகிறது. 'எண்ட பிள்ளைகளின் பசியாற்றவே நான் வந்தேன்' என்ற பதில் அவர்களின் காதில் விழவே இல்லை. இருவரையும் கட்டி வைத்து, அடிக்கிறார்கள். சிகரெட் நெருப்பால் உடலெங்கும் உண்டான காயங்கள், தூண்டில் மீன்கள் போல இருந்தன. ’என்ட மகனை ஒன்னும் செய்யாதீங்க’ என கதறி அழுகிறான் அன்ரனி.

ஏதோ யோசனை செய்தவர்கள், பிரியதர்சனின் மார்பில், நெருப்பால் எல்.டி.டி.ஈ என எழுதுகிறார்கள். அவன் கையில் ஒரு பை மூட்டையைக் கொடுத்து, ’பிரபாகரனிடம் போய் இதைக் கொடு’ என அவனை விரட்டுகிறார்கள். ’எண்ட அப்பாவை விட்டு விடுங்க ’ என அவன் அழும் போதெல்லாம், அவனது கன்னத்தில் துப்பாக்கியால் குத்தினார்கள். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்கராயன் பகுதிக்குள், மூடிக்கட்டிய பொதியுடன் நுழைகிறான் பிரியதர்சன்.

போராளிகள் பையை அவிழ்த்துப் பார்த்தனர். அதில், வெட்டப்பட்ட அன்ரனியின் தலை. ஆம், காதலும் சோகமும் நிரம்பி, பிதுங்கிக் கிடந்த விழிகளுடன் அன்ரனியின் தலை. தனது நெஞ்சில் நெருப்பால் எழுதிய இராணுவத்திற்கு எதிராய் பிரியதர்சன் இயக்கத்தில் சேர்ந்தான் . விரைவில் மூன்று தம்பிகளும் இயக்கத்தில் இணைந்தனர். ஆனால், சில ஆண்டுகளில் நான்கு பிள்ளைகளையும் போரில் பறிகொடுத்து விட்டு, ருக்மணி புலம்பிக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகளின் நடுகல்லும், புகைப்படங்களுமே அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல்.

வெள்ளையன் மரணம் ஏற்படுத்திய அதே அளவு துயரத்தை, அன்ரனியின் மரணமும் உண்டாக்கியது. தன் பிள்ளைகளின் பசியைப் போக்கச் சென்று, மாட்டிக் கொண்ட அன்ரனியின் மரணம் மையக்கதாபாத்திரத்தை விட அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அன்ரனியின் தியாகமும் எல்லா வகையிலும் உயர்ந்ததே.

நாகேஸ்வரியக்கா, பொன்னையாப்பு, ஆனந்தி, அழகுராணி, நாடக நடிகர் மணியண்ணன், அன்பழகன் , பூரணி டீச்சர், பிரா என கதாபாத்திரங்கள் எல்லாம் வினோதனின் நினைவுகள் வழியாக வந்து போகிறார்கள். கவிஞர் தீபச்செல்வன் தான் வினோதன். கவிதை மனத்தில் காட்சிகள் எல்லாம் அழகாய் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு பாத்திரமும் இருக்கிறது. துரோகச் செயல் செய்து, இராணுவத்துடன் ஒத்து வாழும் கதாபாத்திரம் பற்றி விரிவாகப் பேச என்ன இருக்கிறது? ஒதுக்கித் தள்ளுவோம்.

நாவல் வெறுமனே, நடந்த நிகழ்வுகளை மட்டும் சொல்லிச் செல்லவில்லை. கூர்ந்து நோக்கினால், தீர்வு ஒன்று நாவல் முழுக்கப் பேசப்படுவதை அறியலாம்.

மாவீரர் கல்லறையை பார்க்கச் செல்லும் இரு சிறுவர்களிடமும் அங்கிருந்த போராளி, ‘நீங்கள் எல்லாம் நன்கு படிக்க வேணும் என்பதுதான் அவையிண்ட கனவு. உங்களுக்காகவே போராடி, அவை வீரச் சாவடைஞ்சார்கள். இடம் பெயர இடம் பெயர நீங்கள் படிக்க வேணும்’, என்கிறார்.

படிக்கும் வயதில் இயக்கத்தில் சேரக் கூடாது. பாடசாலைக்குப் போய் நன்கு படியுங்கள் என்று இயக்கத்தார் சொல்வதும், நல்லா படிச்சாத்தான் எல்லாம் நல்லதா மாறும் என தாய் சொல்வதும் மிக முக்கியமான காட்சிகள். யாழ் நகரில், டீச்சராக வரும் பூரணி, “சவால்களைக் கடந்து, முன்னேறுற வாழ்க்கையிலதான் அர்த்தம் இருக்கு”, என வினோதனிடம் சொல்லும் வார்த்தைகள் தான் , அவன் சந்தித்த துயர்களுக்கான ஒரே பதில். ஆம், கல்வியின் மூலம்தான், எந்தஒரு சமூகமும் தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

சொந்த நாடின்றி அலைந்து கொண்டிருந்த யூதர்கள், தனது அறிவின் மூலம் தான் உலகை நிரப்பினார்கள். தவிர்க்க முடியாத அளவுக்குச் சாதனைகள் செய்தார்கள். அவர்கள் சந்திக்காத கோரங்கள் இல்லை. ஆனால், அறிவின் துணை கொண்டு நிமிர்ந்தார்கள் . ‘நடுகல்’ நாவலும் படிப்பின் அவசியத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.

எந்தவொரு படைப்பிலும் புனைவிற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு. இந்தக் கதையிலும், காட்சிகளைத் தீவிரப்படுத்த, நிறைய கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி, இரண்டு தரப்பையும் பேச வைத்திருக்கலாம். தீர்வை வாசகனின் பார்வைக்கு விட்டிருக்கலாம். ஆனால், தீபச்செல்வன் தான் கண்டவற்றை மட்டுமே பதிவு செய்து, ஏனையவற்றை வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடுகிறார். இயக்கத்தின் நிகழ்வுகள் கூட நாவலில் வரவில்லை. வருபவை எல்லாமே, வினோதனின் காட்சிகள் மட்டுமே. (அன்ரனியின் விரிவு பகுதிகள் தவிர.).

யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட சில விமர்சகர்கள் சொல்வது போல, நாவலுக்கான கட்டுக்குள் இது வரவில்லையென்றால், போகட்டும், நினைவுக் குறிப்புகள் என்றே இது இருக்கட்டும்!. எவ்வாறாயினும் இலக்கிய உலகில், இது ஒரு முக்கிய இடத்தைப் பெறுமென்றே தோன்றுகிறது.

மிகச் சிறந்த செவ்வியல் ஆக்கங்களுள் ஒன்றாக, மாறியிருக்க வேண்டிய நூல் இது. விரிவு கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை, எதிர்காலத்தில் இன்னும் விரிவாக இந்நூல் எழுதப்படலாம்.

நாவல் முழுக்க, தனது அண்ணனின் புகைப்படத்தைத் தேடி அலையும் தம்பியின் வேதனையை உணர முடிகிறது. அண்ணனின் நினைவுகளில் வாழும் தம்பிக்கு, அந்தப் புகைப்படம் கிடைக்கட்டும். ஆனால், ‘நடுகல்’ என்ற நாவலின் வழியே , வெள்ளையன் நிரந்தர உருவம் பெற்றிருக்கிறான். தம்பி உருவாக்கியிருக்கும் இப்புத்தகம் , சிங்க பண்டார போன்ற மனிதர்களால் அழிக்க முடியாத ஒரு நினைவுக் கல். இந்த நடுகல்லின் மீது, எருக்களை மண்டுவதில்லை, மாறாக, நினைவுகள் வழியே, காற்றுக்கு நூர்ந்து போகாத விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அந்தச் சுடரில் அண்ணனின் சிரித்த முகம் ஒளி வீசிக் கொண்டே இருக்கிறது.

” இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நாரரி
சிறுகலத்து உகுப்பவுங் கொள்வன் கொல்லோ..” - புறம் 232.

இலக்கியம் என்னும் பெரும் கலத்தில் இட்டு நிரப்பப்பட்டுள்ளது இந்த‘நடுகல்’. தம்பி உருவாக்கியிருக்கும் இப்படையலை, அண்ணன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.
*************************

டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் துவங்கிய ’நடுகல்’ நாவல் பற்றிய உரையாடல், 2019, ஜனவரி அதிகாலை 1 மணி வரை தொடர்ந்து நடந்தது. அறையில்,நண்பர்கள் கூடியிருந்த போதும், உள்ளத்தில் வெறுமையே மிஞ்சியிருந்தது. ஆசுவாசமும், வெளிக்காற்றும் மீண்டும் தேவைப்பட்டது. வெளியே வந்தோம். புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வாண வெடிகள் மின்னிக் கொண்டிருந்தன. புதிய வெளிச்சம் வந்திருந்தது. விடியல் நெருங்கி விட்டதையும் உணர்ந்தேன். சூடான ஒரு கோப்பைத் தேநீருக்குப் பின், நான் வீட்டிற்குப் புறப்பட்டேன். என் மனதில், ’நடுகல்’ ஒன்று முளைத்திருந்தது.

வளநாடு சே. சுப்பிரமணியன்

நன்றி - http://ssvalanadu.blogspot.com/

நன்றி - அம்ருதா, ஜூன் 2019

நடுகல்: நினைவுகளை இழப்பதற்கில்லை! தமிழ் இந்து



Published :  20 Apr 2019  11:09 IST



தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல்.
போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் கொடூரங்களைத் துன்பியல் கவிதைகளாக்கியிருப்பவர் தீபச்செல்வன். போர் குறித்த அவரது கவிதைகள் தமிழ்ச் சூழலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான சூழலில் தீபச்செல்வனிடம் தோன்றிய மனவெழுச்சிகளையே அவரது படைப்புகளின் வழி உணர முடிகிறது. அவரது எழுத்துகள் வாசகர்களின் மனசாட்சியைத் தொட்டுக் கேள்வி எழுப்பி நியாயம் கோருபவை.

நாவலின் நாயகர்களாக விநோதனையும், மாவீரனாகிப்போன அவனது அண்ணன் வெள்ளையனையும் குறிப்பிடலாம். ஆனாலும், வெள்ளையனின் புகைப்படம்தான் அசல் நாயகன். வெள்ளையனின் நினைவாக வீட்டில் இருந்த சில புகைப்படங்களும்கூட‌ முள்ளிவாய்க்கால் போரின்போது அழிந்துபோகின்றன. அந்தப் புகைப்படங்களின் தொலைதலும் அழிதலும், அது குறித்த தேடல் நினைவுகளும், விநோதனுக்கும் அவன் தாய்க்கும் அவன் தங்கைக்கும் தாங்கவொண்ணா சித்திரவதையைத் தருகின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடங்கும் வரைகூட அப்புகைப்படங்களைப் பத்திரமாக சேமித்துவைத்திருந்த தாய், யுத்தத்துக்குப் பின்னர், இடப்பெயர்வுகளின் வலிகளோடு முள்வேலி முகாம்களில் தனது மகளோடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும்போது தன் மகன் வெள்ளையனின் புகைப்படத்துக்காக ஏங்கித் தவிப்பது ஒரு துயரக் காவியம்!
போராளிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் மறைந்துபோன பிறகும், பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் குற்றுயிராகப் பிடித்து ‘நலன்புரி’ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்ட பிறகும், பல நூற்றுக்கணக்கான போராளிகளைக் காணாமலடித்துவிட்ட பிறகும் சீருடை தரித்த போராளிகளின் புகைப்படங்களைக் காண சிங்கள ராணுவம் அஞ்சுகிறது. தாய்மண்ணுக்காகப் போராடிய புலிகளின் உடல்கள் சிதைக்கும், மண்ணுக்கும் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையிலும், ‘புலிகள்’ என்னும் சொல்லுக்காக‌ மிரளுகிறது. மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்படுகின்றன.
மாவீரர் தினம் அனுசரிப்பதற்குத் தடைவிதிக்கப்படுகிறது. மாவீரர்களாகிப்போன தங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகளது கல்லறைத் தோட்டங்களை வரிசைக்கிரமமாக அடையாளப்படுத்தி, ஆண்டுக்கு மூன்று முறை மரியாதை செலுத்திவருகிறார்கள் ஈழ மக்கள். மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டபோது அதைக் கடுமையாக மீறிய‌, ஈழத்தின் சமீபத்திய‌ நினைவுகளை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. மாவீரர் துயிலும் இல்லங்களைத் தரைமட்டமாக்கி, விளையாட்டு மைதானமாக உருமாற்றியதை, சிங்கள அரசாங்கம் நடத்திய ஒரு உளவியல் யுத்தமாகவே பார்க்க முடியும்.
விநோதனுக்கும் அவன் அண்ணன் வெள்ளையனுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தைத் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் வீழ்த்தியது. பத்து வயது முதல் போராளியாவதற்காக வெள்ளையன் எடுக்கும் முயற்சிகள் இயக்கத்தால் தடைப்பட்டுவிடுகின்றன.
முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை சிறுவர்களை ஆயதபாணியாக்கும் முயற்சிகளை ஈழப் போராட்டத்தின் வரலாற்றில் எங்கிருந்தும் நீங்கள் எடுத்துவிட முடியாது. ஆனால், முள்ளிவாய்க்கால் போர், புலிகளின் இறுதிக்கட்டத்தை நிர்ணயித்ததோடு அல்லாமல், புலிகளின் அறம் சார்ந்த நடவடிக்கைகளிலும் பெரும் வழுவலை ஏற்படுத்தியது. நேர்மை தவறிய சிங்கள ராணுவ வெறிக்கு எதிராக அறம் மண்டியிட்டுக் கதறியழுதபோது, தூவானமாய் வீசிய கிபீர் விமானக் குண்டுகள் சமாதான வளையத்தை நாசம் செய்வித்து, ஈழ மக்களின் ரத்த ஆற்றை வற்றாமல் ஓடச்செய்தது.
வெள்ளையனைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூருவதற்கு அவர்களின் புகைப்படங்களோ, மாவீரர் துயிலும் இல்லங்களோ இன்று இல்லை. தங்களுக்குப் பிரியமான கற்களையோ மரங்களையோதான் ஈழமக்கள் மாவீரர் நினைவாக வழிபடுகிறார்கள். நடுகற்களையும்கூட உடைத்தெறிய உளவுபார்க்கின்றன ராணுவச் சீருடைகள்.
- செ.சண்முகசுந்தரம், தொடர்புக்கு: c.shanmughasundaram@gmail.com

நன்றி - தமிழ் இந்து 20 ஏப்ரல் 2019