தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

நடுகல்- ஒரு தலைமுறையின் பயணம்



ஒரு இன விடுதலைக்கான நெடும் போராட்டம் தன் வரலாற்றைச் சரியாகப் பதிவுசெய்வதன் வழியாகவே, வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டுத் தன் இலட்சியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முற்படுகிறது. அத்தகைய யுத்தத்தில், இன அழிப்பை தீர்வாகக் கொண்ட தரப்பு வலிமை பெறும்போது, அது தான் நிகழ்த்தும் கொடூரங்களை சாட்சியங்கள் இல்லாமல் அடுத்த தலைமுறையிடமிருந்து மறைப்பதன் வழியாகவே அந்த இன விடுதலைக்கான வேட்கையை முடக்க முயற்சி செய்கிறது. இப்படியானதொரு இன அழிப்பை, அடையாள அழிப்பை, யுத்தத்தின் விளைவுகளை, விடுதலைக்கான வேட்கையை, இயலாமையை, இழப்புகளை ஒரு தலைமுறையின் பயணத்தின் வழியே பதிவுசெய்கிறது நடுகல்.

ஒரு தரப்பின் நியாயங்களைப் பதிவு செய்வதை விட அந்த தரப்பின் மனித உணர்வுகளையும், அவர்களின் விருப்பங்கள், தேவைகள், ஒரு யுத்தம் இயல்பு வாழ்க்கையிலிருந்து அவர்களை எப்படி கிழித்துத் தூர வீசுகிறது என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்கிறது இந்த நாவல்.

“உங்களை எல்லாம் விட்டிட்டு வந்தது எனக்கும் கவலைதான். ஆனால் எங்கடை மண்ணை எதிரியிட்டை இருந்து மீட்கவும் நீங்கள் எல்லாம் சந்தோஷமாக வாழவுமே நான் இயக்கத்திற்கு வந்தேன்” எனக் கடிதம் எழுதும் வெள்ளையன்.

“நிமிர்வோடும் பெருமிதத்தோடும் வாழ்ந்த இடத்தில், அடிமையைப்போல வாய்மூடி மௌனமாக நிற்க, மனம் குமுறிது. தேகம் எரிந்தது” என்று ஆர்மி கேம்பில் வியர்த்து வழிந்து நிற்கும் வினோதன்.

“எங்கடை பிள்ளயளின்ரை நினைவுகளுக்கு நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களாலை அவங்களை அழிக்கேலாது...” என்றவாறு இராணுவத்தை நோக்கி மண்ணைவாரி வீசும் அம்மா.

“எனக்குக் கொள்ளிவைக்கிறதுக்கு என்ரை பிள்ளையைத் தாங்கோ” என்று போராட்டங்கள் தோறும் கத்திக் குரலெழுப்பும் ருக்மணி.

கொத்துக் குண்டுகளுக்கு பலியாகும் மாடுகள். இடம் பெயரும் இடங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கட்டப்படும் வடிவான வீடுகள். வீட்டின் சுவர்களில் கரிக்கட்டையால் வரையப்பட்டிருக்கும் அடையாளம் அழிக்கப்பட்ட மாவீரர்களின் படங்கள்.

இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் ஈழம். நாவலின் சார்புத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நிலையிழந்து தவிக்கும் ஒரு வரலாற்றின் அழுத்தமான அடையாளமாக நிற்கிறது நடுகல்.



-செந்தில்குமார் நடராஜன். சிங்கப்பூர்

வியாழன், 11 ஜூலை, 2019

நடுகல் - கனிமொழி கடிதம்



மதிப்பிற்குரிய தீபச்செல்வன் அவர்களுக்கு,

தங்களது நடுகல் நாவலை வாசித்து முடித்ததும் இனம் புரியாத கனத்த உணர்வு என்னை ஆட்கொண்டது. வாழ்க்கையே போராட்டமாக கொண்ட ஒரு இனத்தின் தோல்வியை இன அழித்தொழிப்பை ஏற்க முடியாத விரக்தியாக இருக்கலாம். போருக்கு பின்னான போரைப் பற்றிய மிக முக்கியமானதொரு வரலாற்று பதிவு நடுகல். இந்நாவல் மூலம் சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. சில கேள்விகள் எழுந்தன.

திருடன்- போலிஸ் விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கும் இயக்கம்- ஆமி விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கும் வாழ்க்கை வேறு வேறு சூழ்நிலையை தந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகள்,போர் தின்று தீர்த்த குழந்தைகள், போர் களவாடிய குழந்தைப்பருவம் என அனைத்தையும் காட்சிபடுத்தியுள்ளீர்கள்.

இறந்த பின் ஆறடி நிலம் அனைவருக்கும் சொந்தம். எம் இனத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் தியாகத்தின் அடையாளத்தை அழித்தொழிப்பது என்பது இன அழிப்பின் உச்சம்.

ஒரு நிழற்படம் எத்தனை நினைவுகளை தந்துவிடுகிறது. இல்லாமல் போனவரின் இருப்பும் அந்த நிழற்படம் தான். வினோதன் நிழற்படங்களை தேடி அலையும் போது அது கிடைத்து விடவே பிரார்த்தது மனது.

முடிவற்ற இடம்பெயர்வு, பசி, இரவும் பகலும் பதுங்கு குழி வாழ்வு, இராணுவ முகாம் வாழ்வு மற்றும் மறுக்கப்பட்ட மாவீரர் நாள் அனுசரிப்பு என முடிவின்றி நீள்கின்ற துயரங்கள் என்னுள் திரும்ப திரும்ப எழுப்புவது ஒரு கேள்வியைத்தான். போரற்ற நிலத்தில் பிறந்திருக்க கூடாதா?

மக்களின் எண்ணிலடங்கா துயரங்களையும் மாவீரர்களின் போராட்டத்தையும் கடும் இன்னல்களுக்கு இடையே காட்சிபடுத்தியமைக்கு நன்றி.

-கனிமொழி அருணாசலம்

வெள்ளி, 5 ஜூலை, 2019

புலிகள் ஈழ சமூகத்தின் மனசாட்சி! மண்குதிரை




விநோதன் என்னும் ஒரு சிறுவன் போரில் மரித்த தன் அண்ணனின் புகைப்படத்தைத் தேடும் கதைதான் ‘நடுகல்’ எனச் சுருக்கிப் பார்க்கலாம். புகைப்படம் என்பதை ஒரு துண்டுச் சாரமாக எடுத்துக் கொண்டு இலங்கையில் நடக்கும் கலாச்சாரப் படுகொலையைச் சொல்வது ‘நடுகல்’லின் முதன்மை நோக்கம்.கவிஞர் தீபச்செல்வனின் முதல் நாவல். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.

தமிழ் மரபில் தாய்க்கு இருக்கும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக தீபன் இதில் வெள்ளையனின் தாயைப் பிரம்மாண்டமாக எழுப்பிக் காட்டியிருக்கிறார். வீட்டை விட்டுக் காதல் கணவருடன் படியிறங்கி வந்தவள். கணவன் பாராரியாய்ப் பரதேசம் போன பிறகு தனி மனுஷியாகக் குழந்தைகளை வளர்த்தவள். அவளது எளிய குடும்பத்தின் வழி ஈழத்தின் சமூக அமைப்பை தீபன் நாவலுக்குள் உருவாக்கிக் காட்டுகிறார். 

இன்னொரு புறமும் புலிகள், அந்தச் சமூகத்துக்குள் என்ன மாதிரியாகச் செயல்பட்டார்கள் என்பதையும் தீபன் சொல்கிறார். ஈழச் சமூகத்தில் அவர்கள் மனசாட்சியாகச் செயல்பட்டதாக இந்த நாவல் சித்தரிக்கிறது. பெயரளவில் கேள்விப்பட்டிருந்த தமிழிழக் காவல் துறை, தமிழீழ நீதிமன்றம் ஆகிய புலிகளின் ஆட்சி அமைப்பின் செயல்பாடுகள் நாவலுக்குள் கதையோட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன.

2009 போரைவிட ராணுவ அமைப்பாக புலிகள் மாறிய பிறகு நடத்தப்பட்ட ஆனையிரவு மீட்பு போர் குறித்துத் திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஓயாத அலைகள் மீட்பு நடவடிக்கையில் பங்குகொண்ட வீரன்தான் நாயகன். போர் முடிந்த சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வந்திருக்கும் எழுத்து இது.

சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம் போன்ற ஈழக் கவிஞர்களின் குரல் பின்னால் இலக்கியதில் தொடரவில்லை. அந்த விட்ட இடத்தில் தீபன் இப்போது தொடங்கியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

கவிஞர் என்ற நிலையில் இருந்து விவரிப்பு மொழிக்குப் பாரம் ஏற்ற தீபன் முயலவில்லை. எளிய கதையைச் சொல்வதற்குச் சிக்கல் இல்லாத மொழியை தீபன் தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்கு என்வாழ்த்துகள்

31.12.02018 அன்று சென்னையில் இடம்பெற்ற நடுகல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதன் சுருக்கம்.

-மண்குதிரை

வெள்ளி, 28 ஜூன், 2019

எளிய மக்களின் கதை!



நடுகல். ஒரு விடுதலைபோரின் பின்னணியில் வாழ்ந்த எளிய மக்களின் உணர்வுகளை உயிரோட்டமாகவும் உண்மையாகவும், எந்த பிம்பப்படுத்தலும், மிகைப்படுத்தலும் இல்லாமல் இரத்தமும் சதையுமாய் படிக்க நேர்ந்தது சிறந்த அனுபவமாயிருந்து. தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இயக்கத்தில் பிள்ளைகள் இருக்கும்போது தாய்மார்கள் படும் அல்லல். கடும்போர் சூழலிலும் சிறுவர்களின் கல்வியை பிரதானப்படுத்தும் போராளிகள்/ இயக்கம், அமைதி காலங்களில் ஈழ மக்களின் எளிய வாழ்க்கை முறை இவை யாவும் தமிழக இளையதலை முறையினருக்கு ஈழம் குறித்த புதிய பார்வையை இந்த நாவல் நிச்சயம் கொடுக்கும். 

நடுகல், தவிர்க்க கூடாத, முடியாத ஈழ இலக்கிய நூல்களில் ஒன்று.

தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்
-ஆரோக்கிய தாஸ்

புதன், 19 ஜூன், 2019

கதாபாத்திரங்களாக வரும் புகைப்படங்கள்!



அன்பின் தீபச்செல்வன் அண்ணா அவர்களுக்கு,

தற்போதுதான் 'நடுகல்' நாவல் படிக்க முடிந்தது. வினோதனின் குடும்பத்தையும், அவர்களின் சுற்றத்தையும் மையமாக கொண்டு கதை நகர்கிறது. ஆள் இல்லா இடங்களில் புகைப்படங்கள் மட்டுமே நினைவுகளை மீட்டுகின்றன. இந்த நாவலில் புகைப்படங்கள் கதாபாத்திரங்களாக வருகின்றன.

தமிழீழ உரிமை போரில் இலங்கை ஆமியின் கோர முகங்களையும், இயக்கம் மக்களுக்கு எவ்வாறு பங்காற்றியது, மக்கள் இயக்கத்திற்கு எவ்வாறு ஆதரவு தந்தனர் என பல விடயங்களை அறிய முடிந்தது.

மேலும் புத்தகத்தை படிக்கும்போது போர் சூழலில் தமிழீழ மக்கள் அனுபவித்த இன்னல்களை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது.

இலங்கை அரசு மக்களை கொன்றது மட்டுமில்லாமல் தமிழீழ உரிமைக்காக போராடிய வீரர்களை பயங்கரவாதிகள் என்பதும், மாவீரர் துயிலும் இல்லங்களைஅழித்தொழிப்பதும், போருக்கு பிந்தைய ஆக்கிரமிப்புகள் என இந்நாவல் இலங்கை பேரினவாதத்தை தோலுரித்து காட்டுகிறது.

'நடுகல்' நாவலை ஒரு வரலாற்று நூலாகவே நான் பார்க்கிறேன். வாழ்த்துகளும் நன்றியும் அண்ணா..

முனிராஜி
14-06-2019
சென்னை

செவ்வாய், 11 ஜூன், 2019

நடுகல் நாவலுக்கு இயல் விருது!


கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டு தோறும் வழங்கும் இயல் விருது விழாவில் நடுகல் நாவலுக்கு சிறந்த புனைகதைக்கான விருதினை வழங்கியுள்ளது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பணியும், இயல் விருதின் முக்கியத்துவமும் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்தது. நடுகல் நாவல், பேரழிவு நகரத்திலிருந்து மீண்டெழ விரும்புகின்ற ஒரு குழந்தையின் மனம் உறைந்த நாவல். எனது நாவலுக்கும் இலக்கியப் பயணத்திற்கும் பெரும் அங்கீகாரமாகவும் ஊக்கமாகவும் அமையும் இவ் விருதினை அளித்துள்ள இலக்கியத் தோட்டத்திற்கு அன்புமிக்க நன்றிகள்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுக் குறிப்பிலிருந்து.
“தான் பிறந்ததில் இருந்து இலங்கையில் நிகழ்ந்து வரும் இனக் கலவரமும் அதில் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் அடைந்த இழப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய நடுகல் என்கின்ற நாவல், அதன் சுய விவரணத் தன்மை காரணமாக ஒரு முக்கியமான ஆவணமாகிறது. அத்துடன் கிளிநொச்சி என்கின்ற ஒரு நகரத்தின் இயற்கை எழில் காட்சிகளையும் இனப் போர் அந்த நகரத்தின்மீது கட்டவிழத்துவிட்ட எண்ணற்ற அழிவுகளையும் அப்பாவி மக்கள் போரில் பட்ட இழப்புக்களையும் போர் முடிந்த பின்னரும் முடியாமல் தொடரும் அம் மக்களின் துயரங்களையும் ஆவணப்படுத்திய நடுகல் நாவலுக்காக 2018ஆம் ஆண்டின் புனைவுப் பரிசை தீபச்செல்வனுக்கு வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை கொள்கிறது. ”

வியாழன், 6 ஜூன், 2019

ஒரு குழந்தை சொல்லும் கதை!


எனக்கு பிடித்தமான என்னை பாதித்த நூல்களுக்கு விரிவான விமர்சனம் எழுதக்கூடியவன் நான். ஆனால் நடுகல் நூல் வெளியானதும் வாசித்தும் கூட நான் அதைப் பற்றி அப்போது எழுதவில்லை.
எழுதுடா என்றான் தீபன். தைரியம் இல்லடா என்றேன். தீபனுடைய அண்ணனின் ஏக்கத்தை நன்கு அறிவேன். இரவு நேரத்தில் அந்த நூலை படித்து தேம்பி தேம்பி அழுது, விமர்சனம் எழுத குறிப்பெடுக்க மீண்டும் வாசிக்க கூட எனக்கு தைரியம் வாய்க்கவில்லை.
பொதுவாக கதைகள் என்பது பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லக்கூடியது. ஆனால் இந்த நாவலில் ஒரு குழந்தை நமக்கு கதை சொல்லுகிறது. அதுவும் போர்சூழலில் அகப்பட்ட குழந்தை தன்னுடைய ஏக்கத்தை சொல்கிறது.
தீபச்செல்வனின் நடுகல் சிலப்பதிகாரம் போன்றது. சிலப்பதிகாரத்தில் புகார் காண்டம், மதுரை காண்டத்தோடு கதை முடிகிறது. அடுத்து வரும் வஞ்சி காண்டம் என்பது இளங்கோவின் அரசியல்.
அதுபோல நடுகலில் அண்ணன் வீரச்சாவோடு கதை முடிகிறது. அடுத்து எழுதிய ஐம்பது பக்கங்கள் தீபச்செல்வனின் அரசியல். இன்றைய சூழலில் தாம் யார் பக்கம் நின்று பேசுறோம் என்று சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அதற்காக அவன் கதை முடிந்து அந்த ஐம்பது பக்கங்களை எழுதி இருக்கிறான்.
இதை எழுதக்கூட மீண்டும் நூலை புரட்ட மனமும் தைரியமும் வரவில்லை. தீபச்செல்வன் அண்ணன், வெற்றி அக்கா, தமிழ்நதி அக்கா போன்றோர் தொடர்ந்தும் சோர்வடையாமல் எழுத வேண்டும்.

-சரவணகுமார் 

ஞாயிறு, 2 ஜூன், 2019

நடுகல்: ஒரு சிறுவனின் பார்வையில் ஈழமும் போரும்! அன்பரசி



தமிழீழ விடுதலைப்போராட்டக்களத்தில் ஆயுதங்கள் மௌனித்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலகட்டத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு என்பது தமிழ் இலக்கியப் பரப்பில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. போர்க்கால மற்றும் அதன் பின்னரான படைப்புகள் இன்று தமிழ் இலக்கிய அரங்குக்கு புதிய கதைகளை, முற்றிலும் வேறுபட்ட பிறிதொரு வாழ்வுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

தமிழகத்தமிழர்களுக்குக் கிடைக்காத, அவர்கள் வாழ்ந்தறியாத வாழ்வியலும் போராட்டமும் எம்முடையது. அவர்களது கற்பனையில் கூட எம் வாழ்வியலை உணர்ந்திட முடியாது என்பது மட்டுமல்ல. இலக்கியமாகக், கலையாகப் பிரதிபலித்து விடவும் முடியாது என்பதற்கு எம் வலி குறித்து இதுவரை வெளிவந்த அத்தனை இந்திய, தமிழகத்; திரைப்படங்களின் கோணல் பார்வையே சாட்சியாய் உள்ளது.

தனித்துவம் நிறைந்த எமது துயர வாழ்வியலானது கலை, இலக்கிய வடிவங்களைப் பெறவேண்டும் என்பது மட்டுமல்ல, அது அவ்வாழ்வை வாழ்ந்தனுபவித்த எம்மவர்களாலேயே கலை, இலக்கியப் பரப்புக்கு அறிமுகப்படுத்தப்படவும் வேண்டும். உலக அரங்கில் இவை முக்கியத்துவம் பெறவேண்டிய தேவையும் உண்டு. எம் விடுதலைப் போராட்டத்தின் நியாயமான தேவையை எடுத்தியம்ப இப்படைப்புகளினதும் எழுத்தாளர்களினதும் பணி மிக முக்கியமாகிறது. என்னைப் பொறுத்தவரை இது எமது படைப்பாளிகளது முக்கிய கடமையும் ஆகிறது.

அந்த வகையில் போர்ச்சூழல், அது ஏற்படுத்திய வடுக்கள், அதற்குப் பின்னரான வாழ்வியல் போன்றவற்றை அலசும் பல படைப்புகள் 2009 முதல் இன்றுவரை வெளிவந்துள்ளன. அவை குறிப்பாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தாயக மண்ணில் இருந்து சிங்களப்பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்தபடியே எமது தரப்பு நியாயங்களையும் பேசியவை என்று இதுவரை வெளிவந்த எதனையும் சொல்லிவிடமுடியாது.

தமிழர் தரப்பு நியாயங்களைப் பேச முடியாத இக்கட்டான சூழலில், அவற்றை விடுத்துப் பேசி விடுபடலைச் செய்வது முழுமையான படைப்பு ஆகாது. அப்படியான எழுத்து புனைவாக வந்தால் என்ன? நினைவுக்குறிப்பாக வந்தால் என்ன? அப்படி விடுபடல்களைச் செய்த படைப்புகள்தான் சில இதுவரை அங்கிருந்து வெளிவந்துள்ளன.

அவ்வகையில் இன்று இங்கு அறிமுகப்படுத்தப்படும் தம்பி தீபச்செல்வனின் நடுகல் நூல் தனித்துவம் பெறுகிறது. இந்த நூல் போரும் இடப்பெயர்வும் அலைக்கழிக்கும் காலகட்டத்தில் சிறுவனாக இருந்த கதைசொல்லியின் பார்வையில் போர், போராட்டம், அவை சார்ந்த நியாயப்பாடுகளை பேசுகிறது. 

ஒரு சிறுவனின் பார்வையில் எமது விடுதலைப்போராட்டம், போராளிகள், மக்கள், இராணுவம், விடுதலை, வீரம், பயம், இழப்பு என அனைத்தையும் பேசும் நடுகல் என்ற இந்த நூல் என்னைப் பொறுத்தவரை இதுவரை வெளிவந்த பிற படைப்புகளினின்றும் பரந்த வேறுபட்ட பார்வையை வாசகர்களுக்கு விரிக்கின்றது.

பதின்ம வயதுச் சகோதரனுக்கும் கதைசொல்லியான சிறுவயதுத் தம்பிக்குமான பாசப்பிணைப்பு, அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல்கள், இருவரும் தத்தம் குழந்தைமைப் பார்வையினூடே போர், போராட்டம் குறித்து வைக்கும் சிந்தனைகள் என்று பலவற்றை நிறைவாக இந்நூலில் பதிவு செய்துள்ளார் தீபச்செல்வன்.

அனுபவித்தபவர்கள் அனுபவக்குறிப்பாக எழுதுவது புனைவிலும் சிறந்தது என்பது என் கருத்து. வெளிநாடுகளில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களுக்கு இவ்வலியைப் புனைவாக எழுதாமல் நினைவுக்குறிப்பாகவே எழுதும் சுதந்திரம் உண்டு. ஆனால் தீபச்செல்வன் தாயகத்திலேயே இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர். அவர் இன்றும் அச்சுறுத்தல்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டே எழுதுபவர். அப்படியான சூழலில் வாழும் அவர் தன் மனவலியைப் பதிவு செய்வதற்குப் புனைவைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை. அவர் வாழும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு ஏற்புடையது அல்ல என்பது மட்டுமே இது புனைவு வடிவம் பெறுவதற்கு முக்கிய காரணியாய் அமைந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

நினைவு அழிப்பு, வரலாற்று மறைப்பு என்பதே சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் இன்றைய தமிழின அழிப்பு நிகழ்ச்சி நிரலில் முக்கியத்துவம் பெறுகிறது.

போர் நிறைவுக்கு வந்த பின்னும் ஆயிரக்கணக்கான கல்லறைகளை உடைத்துத் தூள் தூளாக்கி இருந்த இடம் இல்லாமல் செய்தது அப்படியான வன்ம வெறியின் வெளிப்பாடே.

மாவீரர் நாளில் மாவீரர்களை நினைவுகூரும் உரிமையைக் கூட மறுப்பதும் இதனாலேயே. எம் மண்ணுக்காய் மடிந்தவர்கள் பலரின் ஒளிப்படங்கள் கூட இல்லாமல் செய்ததும் இந்த நினைவு அழிப்பு அரசியலே.

மண்ணுக்காய் மடிந்த அவர்கள் முகங்களை மனத்திரையில் மட்டுமே மீண்டும் மீண்டும் ஓட்டி வேதனையோடு அல்லலுறும் பல குடும்பங்களின் இன்றைய நிலையைப் பேசுகிறது இந்நூல்.

தமது மாவீர உறவுகளின் ஒளிப்படங்கள்கூட இல்லாமல் எங்காவது எவரிடமாவது ஒன்றாவது இருந்துவிடாதா என்று மனதுக்குள் அங்கலாய்க்கும் ஆயிரமாயிரம் பெற்றோர், சகோதரங்கள், உறவுகளால் இந்த அலைக்கழிப்பை தமது அவலத்தை எழுதிவிடமுடியாது. அவர்கள் அனைவரதும் குரலாக ஒரு படைப்பாளி பேசியுள்ளான். அனுபவித்ததன் வேதனையை எழுத்துகளில் கொட்டி வடித்திருக்கிறான். அந்த வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது தீபச்செல்வனின் இந்த நடுகல்.

அடுத்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டங்களின் குறியீடாகவும் அப்போராட்டங்கள் குறித்த உலகின் பாராமுகம், அப்போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் உயிராபத்து, அச்சுறுத்தல்கள் ஆகியன குறித்துப் பேசும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ள ருக்குமணி என்ற தாயின் கதாபாத்திரம் இந்நூலில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ருக்குமணி என்ற கதாபாத்திரம் நான்கு பிள்ளைகளை மண்ணுக்காய் ஈந்த ஒரு தாய். மூவர் வீரச்சாவு. ஒரு மகன் காணாமல் ஆக்கப்பட்டவன். அந்தக் காணாமல் ஆக்கப்பட்ட மகனைச் சிங்கள அரசின் சிறைக்கைதிகள் நிகழ்வொன்று குறித்த பத்திரிகைச் செய்தியில் காண்கிறாள் தாய். தனது மகனைத் தன்னிடம் தாருங்கள் என்று போராடுகிறாள். அப்படி ஒருவன் தங்களிடம் இல்லவே இல்லை என்று மறுக்கும் இராணுவத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கிறது அவளது இப்போராட்டம். ஆனால் அவர்கள் அவள் மகனை ஒப்படைக்காமல் தங்களிடம் அவன் இல்லை என்றே சொல்லிவருகிறார்கள். அந்தச் சூழலில் ஒருநாள் அத்தாயின் உடல் அவள் வீட்டுக் கிணற்றில் இருந்து பிணமாக எடுக்கப்படுகிறது. இறப்பு வீட்டில் இராணுவத்தினர், போராடினால் என்ன நடக்கும் தெரியுமா? பாருங்கள் என்பதான நக்கல் பேச்சுத்தோரணையோடு நிற்கிறார்கள். அங்கு கிடத்தப்பட்ட தாய் ருக்குமணியின் உடல் குறித்து எழுத்தாளர் சொல்கிறார். 

'வெறுமை கவிந்திருந்த அந்தக் கூடாரத்தில் கலகலத்த அவளது குரல் கேட்குமாற்போலொரு பிரமை. குரல்கள். குரல்கள் எங்கும் செல்வதில்லை' உண்மைதான் அந்தக் குரல்கள் எங்கும் செல்வதில்லை. பேசாத பலரை, போராடாத பலரைக்கூட அந்தக் குரல்கள் தொடர்ந்து துன்புறுத்தும். அலைக்கழிக்கும். ருக்குமணியின் குரல் தீபச்செல்வனின் குரலாக இந்நூலில் ஒலித்துள்ளது.

இந்த மக்கள் போராட்டங்கள், அவற்றுக்கெதிரான அதிகாரத்தின் அச்சுறுத்தல்கள், இந்த அச்சுறுத்தல்கள் மக்களிடையே ஏற்படுத்தும் உணர்வலைகள் என்பன ஆழமாகப் பேசப்படவேண்டியவை. இந்நூலில் கூட இது குறித்துப் பேசிய பகுதி போதாது, அது இன்னும் நீண்டிருக்கலாம் என்றே தோன்றியது.

இந்நூலை வாசித்தபோது சிறுவர்களின் ஆழ்மனதில் எழும் போர் தொடர்பான எண்ணங்கள், அனுபவத்தின் வழி அவர்கள் கொண்ட எதிரி தொடர்பான பார்வை என்பன நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றே உணர்ந்தேன்.

ஒரு குழந்தையின் பார்வையில் தன்னையும் தன்னைச் சூழ்ந்தவர்களையும் கொல்ல வரும் விமானங்களின் கொடூரம் எப்படிப் பதிவாகியிருக்கும், அதற்கெதிரான அவர்களது எதிர்ப்புணர்வு எவ்வாறு பதிவு செய்யப்படும் என்பதை குழந்தையாகவே மாறி சிந்திக்கும்போது தீபச்செல்வனின் பாத்திரப்படைப்பும், சித்தரிப்பும் உணர்வோடு ஒன்றிப்போகிறது. அது சரியானதாக, நேர்மையானதாக மனதில் இடம்பிடிக்கிறது.

அதிலும் குழந்தைமை இழக்காத வயதில் உள்ள கதைசொல்லியின் பார்வையினின்று பதின்ம வயதினனான அவனது சகோதரனின் பார்வையில் இருக்கக்கூடிய நுண்ணிய வேறுபாடு சரிவரப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

'இப்படி செல் அடிக்கிறானே... வானம் உடையாதா?' என்று கேட்கும் குழந்தையாக இருந்த, பிறிதொரு நாளில் மண்ணுக்காக உயிரைக் கொடுக்கும் கார்த்திகா,

'உனது ரொட்டியைக் கொடுத்தால் அண்ணன் இயக்கத்துக்குப் போகமாட்டேன்' என்று அண்ணன் சொல்ல அதை அப்பாவியாய் நம்பும் தம்பி,

10 வயது தொடக்கம் தன்னை இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று இயக்கத்துக்கு ஓடுவதையும், பொறுப்பாளரால் திருப்பி அனுப்பப்படுவதையுமே வழக்காகக் கொண்ட, பெரிய ஆளாகி என்னவாக வர விருப்பம் என்று கேட்டால் இயக்கமாய் வரப்போறன் என்று ஆசிரியரிடம் சொல்லும் சிறுவனான அண்ணன் கதாபாத்திரம்,

'மாவீரர்களுக்காக அவையி;ன்ட அம்மா, அப்பா, தம்பி அழமாட்டினமே?' என்று கேட்கும் வினோதனின் குழந்தை மனம். 'அழுவினம்தான், ஆனால் அந்த அம்மா, அப்பா, தம்பியளோட எங்கட மண் எல்லாத்தையும் ஆமியிட்ட இருந்து காப்பாத்தத்தான் வீரச்சாவுகள்' என்று புரிந்துவைத்திருக்கும் அண்ணன் கதாபாத்திரம்,

இப்படி வேறுபட்ட வயதுக் குழந்தைகளின் பார்வையில் ஏற்படும் மாற்றங்கள், உணர்வுகள் குறித்துப் பேசுகிறது நடுகல்.

இயக்கப்பாடல்களையே வாய் எப்போதுமாய் முணுமுணுக்கும் வாழ்வியலைப் பெற்ற தலைமுறை அது. போரும் போர் சார்ந்த வாழ்வும் வாழ்வாகிப்போன இந்தத் தலைமுறையினர் விமானங்களைத் தம்மால் கல் எறிந்து வீழ்த்திவிடமுடியாது என்பது நன்றாகத் தெரிந்தாலும் குண்டுபோடும் விமானங்களை நோக்கிக் கல் எறிகிறார்கள். இதனைக் கதைசொல்லியின் அண்ணா செய்கிறான். இது அவர்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடே.

குழந்தைகள் என்போர் 'மாதிரி நடித்தல்' அதாவது pசநவநனெ pடயல என்பதை விரும்புவார்கள், அப்படியானதே இந்தக் கல்லெடுத்து எறிதலும். உண்மையில் சட்டி பானை வைத்து சமைத்து விளையாடுவதில்லை குழந்தைகள், ஆமி-இயக்கம் விளையாட்டு என்று உண்மையில் துப்பாக்கிச் சண்டை நடத்துவதில்லை, கள்ளன் போலிஸ் விளையாட்டும் இப்படித்தான். இது ஒருவகை pசநவநனெ pடயல அவர்களுக்கு. அதுபோலத்தான் இந்த விமானத்தை நோக்கிக் கல்லெறிதலும்.

பள்ளிக்கூடங்கள் மீதுகூட விமானக்குண்டுத்தாக்குதல் நடத்தி தம் கண்முன்னே பல குழந்தைகள் உடல்சிதறிப்பலியாவதைப் பார்க்கும் அவலத்தைக் கொடுத்த எதிரி மீதான தமது வெறுப்புணர்வைக் காட்டும் வெளிப்பாடே அது.

செல்லடியில் நாள்தோறும் பயந்து நடுங்கி, சதைப்பிண்டங்களாக சக மனிதர்களைப் பார்த்துப் பழகிய குழந்தை மனங்களில் கிளம்பும் இயற்கையான எதிர்ப்புணர்வின் தாக்கம் அது.

அதை அந்தச்சூழலில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளான குழந்தைகளின் மனக்கொதிப்பாகப் பார்ப்பதே சரி. அதை விடுத்து விமானத்தை நோக்கிக் கல்லெறிவார்களாம், இதெல்லாம் நடந்ததா? இது நம்பும்படியான எழுத்தா என்று கேலிக்குள்ளாக்குவது தாங்கள் அறிவாளிகள் என்று காட்ட முனைவோரின் அறிவிலித்தனம் என்று நாம் புறந்தள்ளுவதே சிறப்பு.

ஒவ்வொரு நாவலின் கருவுக்கும், கதைக்களத்துக்கும், பாத்திரப்படைப்புக்கும் பின்னால் ஒரு நியாயமான பார்வை அவசியம். அந்தப் பார்வையினூடே கதைக்களத்திற்கும், கதாபாத்திரங்களுக்கும் உரிய நேர்மையான பங்களிப்பைச் செய்யவேண்டும். அந்தப் பார்வையோடு படைக்கப்படும் எந்த ஒரு படைப்பும் அழகியல் நிறைந்ததுதான். அதை விடுத்துத் தனியாக அழகியல் என்ற ஒரு சோடிப்பு படைப்புக்குத் தேவையில்லை. குழந்தை மனங்களின் தெளிவான, நேர்மையான பிரதிபலிப்பே இப்படைப்பில் இலக்கியத்திற்கான அழகியலாக வடிவம் பெற்றுள்ளது என்று நான் நினைக்கிறேன். இதைத் தவிர்த்ததான அழகியல் இப்படைப்புக்குத் தேவையும் அற்றது என்பது என் பார்வையாகிறது.

இடப்பெயர்வே நிதர்சனமான போராட்ட வாழ்வில் கல்வி மறுக்கப்படுவதும் வாழ்வியலாகிறது. அந்த வகையில் கல்வி கற்றலுக்கான சூழல் மறுக்கப்படுவதானது குழந்தையின் மனநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இந்நூல் பேசுகிறது.

இடம்பெயர்ந்து பல நாட்கள், மாதங்கள் ஆன சூழலில் பள்ளிக்கூடத்தையே மறந்த குழந்தைகள், உயிர்காக்க வேண்டிய கட்டாயத்தினால் படிப்பின் ஆசை இல்லாதுபோன குழந்தைகள், பள்ளிக்கூடங்களே அகதி முகாம்கள் ஆனதால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்ட படிப்பு, விமானக்குண்டுவீச்சுக்கு இலக்காகும் பள்ளிகளும், அதனால் கண்முன்னே உடல் சிதறிப் பலியாகும் சக குழந்தைகளைப் பார்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் எனப் பல்வேறு வழிகளிலும் கல்வி மறுக்கப்படும் துயர சூழலைப்பேசுகிறது நடுகல். 

இயற்கைக்கும், விலங்குகளுக்கும் போர் ஏற்படுத்திய வடுக்களும் இழப்புகளும் மனிதர்களுக்கு நிகழ்ந்ததிலும் கொடூரமானது. அதுகுறித்தும் பேசுகிறது நடுகல்.

எழுத்தாளர் அடிப்படையில் ஒரு கவிஞர். ஆகையால் விவரிப்புகள் அவருக்கு இயல்பாகவே அழகாக வருகிறது. அது போதுமானது. ஆனாலும் விவரிப்புகளைக் கொண்டு எழுத்தாளர் கட்டி எழுப்ப முயன்றிருக்கும் படிமங்கள் மனதில் பெரிதாக ஒட்டவில்லை.

இருக்க கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் மினக்கெட்டு சீர்படுத்தியிருக்கலாம். கதாபாத்திரங்களின் அறிமுகம் ஆழமாய் மனதில் பதியவில்லை. மீண்டும் மீண்டும் சில பக்கங்களைத் திருப்பி யார் இவர், யார் அவர் என்று சரிபார்த்துக் குழம்ப வைக்கும் மனநிலையை வாசகர்களுக்குத் தராமல் இருந்திருக்கலாம். அது வாசிப்பில் தொய்வையும் சோர்வையுமே உண்டுபண்ணியது.

தீபச்செல்வன் பார்த்த, அனுபவித்த கேட்ட கதைகள் இன்னும் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றை இலக்கிய வடிவமாக்கும் ஆற்றல் தீபனுக்கு உண்டு. நடுகல் என்ற இந்த நாவல் அதறகான முதல் முயற்சி. மேலும் பல படைப்புகளுக்கான முன்னோட்டம். இன அச்சுறுத்தலுக்கு நடுவே வாழ்ந்துகொண்டு படைப்பிலக்கியத்தை வெளிக்கொணர்தல் என்பது பெரும் சவால்தான். ஆனாலும் உலகுக்குக் கேட்காத, நசுக்கப்பட்ட மக்களின் குரலாக தீபனின் எழுத்துக்கள் ஏதோவொரு வடிவம் பெறவேண்டும்.

சிலர் உங்களைத் தரம் தாழ்த்தி சிறுமைப்படுத்துகிறார்கள், கேலிக்குள்ளாக்குகிறார்கள் என்றால் அது நீங்கள் உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம். அவற்றைப் புறந்தள்ளி செயற்படுதலே சிறப்பு.

எதிரியும் ஏகாதிபத்தியங்களும், சமூக வலைத்தளங்களை உள்ளடக்கிய கோப்பரேட்களும் என்னதான் தலைகீழாக நின்றாலும் எம் போராளிகள், எம் போராட்டம் குறித்த அவர்களது நினைவு அழிப்பு நடவடிக்கைகளும், வரலாற்று மறைப்பும் அவற்றுக்காக ஏவப்படும் அதிகார அரசியல் வன்முறையும் எமது விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தை அழித்துவிட முடியாது. பத்தாண்டுகள் கடந்துபோயிற்று. ஆனாலும் கொத்துக்கொத்தாய் எம் மக்கள் கொல்லப்பட என்ன செய்வது, ஏது செய்வதென்றறியாது பரிதவித்துப் பதைபதைத்துக் கண்ணீருடன் கடந்த அந்த நாட்களின் வடுக்களும் வலியும் இன்னும் ஆறவில்லை. வன்மம் சிறிதும் அடங்கவில்லை. எதிரியும் ஏகாதிபத்தியங்களும் எது செய்தும் அழிக்கமுடியாத காலத்தின் பதிவாய் அது ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் இன்றும் கனன்றபடிதான் உள்ளது.

அந்த வகையில், இறுதியாகக் கதைசொல்லியின் அண்ணா குறித்து கதைசொல்லியின் நண்பனான அன்பழகன் சொன்னதையே வாசித்து தீபச்செல்வனுக்கும் நம் அனைவருக்குமான ஆறுதலாக, வேண்டுதலாக அதனை எடுக்கலாம் என நினைக்கிறேன்

'உன்ரை அண்ணா உனக்குப் பக்கத்திலை, உனக்குள்ள, உங்கட அம்மாவுக்குள்ளை இருக்கிறான். அவனின்ர வீரச்சாவுதான் உன்னைப் படிக்கத் தூண்டினது. அதுதான் உங்கட வீட்டின்ர வறுமையை நீக்கினது. அதுதான் உன்னை ஒரு புகைப்பட ஊடகவியலாளன் ஆக்கினது. இறந்த பிறகும் உன்ர அண்ணா வாழுறான். அவன் உங்கட எல்லா வளர்ச்சியிலயும் இருக்கிறான். ஒரு மாவீரனுக்கு மரணமில்லை. அவயின்ர மரணம் மகத்துவமானது. அவயின்ர கனவு வீண்போகாது'
கடந்த 26.05.2019 அன்று கனடா நாட்டில் இடம்பெற்ற 'நடுகல்' நூல் வெளியீட்டு விழாவில் விமர்சகர் அன்பரசி  (Anbarasy Singam) ஆற்றிய ஆய்வுரை.