தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

வியாழன், 11 ஜூலை, 2019

நடுகல் - கனிமொழி கடிதம்



மதிப்பிற்குரிய தீபச்செல்வன் அவர்களுக்கு,

தங்களது நடுகல் நாவலை வாசித்து முடித்ததும் இனம் புரியாத கனத்த உணர்வு என்னை ஆட்கொண்டது. வாழ்க்கையே போராட்டமாக கொண்ட ஒரு இனத்தின் தோல்வியை இன அழித்தொழிப்பை ஏற்க முடியாத விரக்தியாக இருக்கலாம். போருக்கு பின்னான போரைப் பற்றிய மிக முக்கியமானதொரு வரலாற்று பதிவு நடுகல். இந்நாவல் மூலம் சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. சில கேள்விகள் எழுந்தன.

திருடன்- போலிஸ் விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கும் இயக்கம்- ஆமி விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கும் வாழ்க்கை வேறு வேறு சூழ்நிலையை தந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகள்,போர் தின்று தீர்த்த குழந்தைகள், போர் களவாடிய குழந்தைப்பருவம் என அனைத்தையும் காட்சிபடுத்தியுள்ளீர்கள்.

இறந்த பின் ஆறடி நிலம் அனைவருக்கும் சொந்தம். எம் இனத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் தியாகத்தின் அடையாளத்தை அழித்தொழிப்பது என்பது இன அழிப்பின் உச்சம்.

ஒரு நிழற்படம் எத்தனை நினைவுகளை தந்துவிடுகிறது. இல்லாமல் போனவரின் இருப்பும் அந்த நிழற்படம் தான். வினோதன் நிழற்படங்களை தேடி அலையும் போது அது கிடைத்து விடவே பிரார்த்தது மனது.

முடிவற்ற இடம்பெயர்வு, பசி, இரவும் பகலும் பதுங்கு குழி வாழ்வு, இராணுவ முகாம் வாழ்வு மற்றும் மறுக்கப்பட்ட மாவீரர் நாள் அனுசரிப்பு என முடிவின்றி நீள்கின்ற துயரங்கள் என்னுள் திரும்ப திரும்ப எழுப்புவது ஒரு கேள்வியைத்தான். போரற்ற நிலத்தில் பிறந்திருக்க கூடாதா?

மக்களின் எண்ணிலடங்கா துயரங்களையும் மாவீரர்களின் போராட்டத்தையும் கடும் இன்னல்களுக்கு இடையே காட்சிபடுத்தியமைக்கு நன்றி.

-கனிமொழி அருணாசலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக