தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

வெள்ளி, 31 மே, 2019

வினோதன் பேசுகிறான்! கவிஞர் பிறைமதி



ஒரு மிகப்பெரிய வாழ்வியலை, 200 பக்கங்களில் அடக்குவது எவ்வளவு சிரமமானது...?
வினோதன் பேசுகிறான். அவனின் வாழ்க்கை, அண்ணன் மீதும் தங்கையின் மீதும் கொண்ட அன்பு, அம்மாவின் மீது வைத்த காதல், அப்பா எனும் பிம்பத்தில் ஒளிந்து கிடந்த அப்பழுக்கற்ற எதிர்பார்ப்பு மற்றும் காதல், போர், இனப்படுகொலை, நிலம், வாழ்விட மாற்றங்கள், உதனை சுற்றிய சோகம், வலி, வேதனை............. இவைகளை மையப்படுத்தியே கதை நகர்கிறது.
ஒவ்வொரு அத்தியாயம் துவங்கும்போதும் ஈழத்தின் அழகு, பூக்கள், மரங்கள், பறவைகள் என அதன் இயற்கை சார்ந்த அழகியலை நம்மோடு பகிர்ந்துகொண்டே கதையை துவங்குகிறார்.
அப்பாவின் மீது கொண்ட அன்பும் ஏக்கமும் அண்ணனின் மீது வினோதனுக்கு தெரியாமலேயே அளவற்று பாய்கிறது.
கிளிநொச்சியில் அடிக்கடி நடக்கும் குண்டு வீச்சுகளால் இடம்பெயர்ந்து சென்று வாழ்வது மீண்டும் அதே இடத்தை தேடி வருவதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் இடங்கள். குண்டு வீச்சுக்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறுவது, முக்கியமான பொருள்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு மீதியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியேறுவதெல்லாம் சோகம் நிறைந்த இடங்கள். மீண்டும் வந்த அவர்கள் வாழ்ந்த வீட்டை வந்தடையும்போது காடு மண்டி, அதன் சுவடுகளை இழந்து வெற்றுடம்புடன் நிற்கும் கிராமம்....
மாடுகளும் நாய்களும் புறாக்களும் பயணத்தில் கூடவே வந்து உயிரிழக்கும் இடங்கள் பேரதிர்ச்சியின் உச்சம்.
அண்ணன் இயக்கத்தில் சேர்ந்து, இடையில் வந்தபோது நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் அவ்வளவு வழிகளோடே நம்மால் நகர முடிகிறது. அடுத்த சந்திப்பு நிகழ்வதற்குள் வீரச்சாவடைந்து சடலமாக வீடு வந்தடையும்போது நமக்கும் அழ தோன்றுகிறது.
மூன்று குழந்தைகளை இயக்கத்திற்கு அனுப்பி சுதந்திர காற்றை சுவாசிக்க துடிக்கும் இன்னொடு அம்மாவை கடவுளென என் மனம் நினைக்கிறது. அவளின் வீரம், அவளின் பேச்சுகள் யாவும் இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.....
முள்வேலி, முள்வேலி சந்திப்புகள், வினோதனின் படிப்பு, பிரிவு, கந்தக காற்று, குண்டு சத்தம், வானொலியில் 9 மணிக்கு ஒலிபரப்பாகும் வீரர்களின் மரண செய்தி, மாவீரர்களின் சமாதி, படுகொலைகள், வயிறு கிழிந்து குடல் சரிந்து கிடைக்கும் மனிதர்கள், புகைப்படம் தேடி அலையும் தம்பியின் பயணம், என நம்மை கடந்து செல்லும் பக்கங்கள் , ஒருவிதமான அச்சத்தை தந்து கைகளை நடுங்க செய்கிறது.............................................
" நல்லா இருக்கியளா? அழக்கூடாது! எங்கடை சனத்துக்காகப் போராடுறதுதான் எனக்கு பிடிச்சிருக்குது. நீங்கள் சந்திசமாய் இருக்க வேணும்" அம்மாவின் கலங்கிய விழிகளைத் துடைத்துபடி சொன்னான்....
' இந்த சண்டை எல்லாம் எப்ப முடியும்? நாங்கள் எல்லாரும் எங்கடை வீடுகளிலை ஒண்டாய் வாழுற காலம் எப்ப வரும்?'
" கெதியிலே இந்த சண்டையள் முடியும். எங்களுக்கு ஒரு விடிவு வரும். விடுதலையடைஞ்ச தமிழீழத்திலை எங்கடை மக்கள் எல்லாம் நம்மதியாய் இருப்பினும்"
பேருந்து வேகமாக விரைந்தது. அவன் இறங்கி வருவானென அப்போதும் நம்பிக்கொண்டிருந்தது மனம். ஏமாற்றம்தான். அவன் வரவில்லை. பேருந்து மறையத் தொடங்கியது.
அழுதபடி ஒருத்தி முட்கம்பிகளுக்குள்ளால் வெளியே கையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். அவளின் கையில் இருக்கும் குழந்தையும் முட்கம்பிகளுக்குள் கைய நீட்டியது. பிச்சைக்காரர்களே இல்லாத நிலத்தின் சனங்கள் கையேந்தும்படியாய் அடைக்கப்பட்டார்கள்.
"எங்கடை பிள்ளையளின்ரை நினைவுகளை நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களால் அவங்களை அழிக்கேலாது....."
"எங்கடை பிள்ளையனை உங்களாலை இல்லாமல் செய்யவும் ஏலாது. எங்கடை பிள்ளையளின்டை கனவை உங்களாலை அழிக்கவும் ஏலாது....."
எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இப்படி பிரச்சினைகளா......?
ஆனால் ஈழத்தில் மட்டும் ஏன்...? தனக்கான மண்ணை, இது என்னுடைய மண் என்று போராடும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே...?

புலிகளின் தாகம்.... தமிழீழ தாயகம்.......

( நாவலை அறிமுகம் செய்த தோழர் செந்தில் வரதவேலுஅவர்களுக்கு நன்றி)

கவிஞர் பிறைமதி, பார்வேட்டை என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர். 

சனி, 25 மே, 2019

நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு!


கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று  உலகின்  பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருவது அண்மையில் நடந்துவரும் அதிசயம்.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பொன்னைய்யா விவேகானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கந்தசாமி கங்கதரனும் தீபச்செல்வன் குறித்த அறிமுகத்தை இயக்குனர் ரஞ்சித் யோசப்பும் வழங்கவுள்ளனர்.

நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் ரதனும் வழங்கவுள்ளார். அத்துடன் நடுகல் பெறுமானம் என்ற தலைப்பில் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் ஆய்வு ஒன்றினை நிகழ்த்தவுள்ளார். மேலும் ஆய்வுரைகளை  ஈழக் கலைஞர் மேர்லின் மற்றும் அன்பு ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். நூலினை ஈழத்துக் கவிஞர் சா.வே. பஞ்சாட்சரம் வெளியிட்டு வைக்க கவிஞர் தீபச்செல்வனின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது.

ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வனின், முதல் நாவலான நடுகல் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு காணும் நடுகல் நாவலுக்கு சிறப்பான வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஈழப் போரில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பி இடையிலான வாழ்வும், போராட்டத்திற்கு செல்லும் அண்ணனின் நினைவுகள் மீதான தம்பியின் தேடலாகவும் அமையும் கதையைக் கொண்ட இந் நாவல், தமிழீழ தேசம் எப்படியிருந்தது என்பதை பேசுகின்றது.


பிரான்ஸ் மற்றும் இலண்டனில் இந்த நாவலின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில், சுவிஸ், டொன்மார் மற்றும் அவுஸ்ரேலியாவிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ்வின் https://bit.ly/2MbHXIs

செவ்வாய், 21 மே, 2019

நடுகல்: நானிழந்த சுதந்திரம்! நான் விதைத்த கண்ணீர்!! நிலவிந்தன்


"காத்துக்கு விளக்கு நூரப் போகுது! சுளகை வடிவாய்ப் பிடி" என்ற ஆரம்பத்தோடு கதை நகரும். எதிர்வரும் காலங்களில் உண்மையான ஈழ வரலாறு அழிக்கப்படலாம், மறைக்கப்படலாம் "ஈழம்" பற்றி உண்மையான ஈழப்போராட்ட வலிகள் பற்றி, போர்குற்றங்கள் பற்றி "நடுகல்" விபரித்து சொல்கிறது. ஈழம் பற்றி ஆராய விரும்புபவர்களுக்கு முக்கிய மூலாதாரமாக "நடுகல்" இருக்கும்.
வன்னி நிலத்தின் அழகியலையும், வாழ்வியலையும் தன் எழுத்துகளால் வாசிப்பவர்களை வன்னி மண்ணை நேசிக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர் தீபச்செல்வன். குறிப்பாக கிளிநொச்சியை. தன் சொந்த நிலத்தில் விடுதலை இன்றி சுதந்திரம் பறிக்கப்பட்டு வாழும் நம் இனத்தின் துயரங்களையும், வலிகளையும், ஏக்கங்களையும் நாவலில் சொல்லி கண்களை கலங்கடித்துவிட்டார்.
அண்ணாவுக்கு ஒண்டும் நடந்திருக்காது... தங்கையும், தம்பியும் அம்மாவும் காத்துருக்க நிலத்தின் மீதும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் களமாடி அண்ணா வீரச்சாவு வாசிக்கும் கனம் கண்ணீர் நிரம்பிய கண்கள் அண்ணா வந்து விடுவான் அண்ணா எல்லாமாவும் இருக்கிறான். அண்ணாவுக்காக கண்ணீருடன் காந்திருந்த அம்மாவுக்கு! "அண்ணவின் வித்துடல்" கதை அண்ணாவின் நினைவுகளுடனே நகர்ந்து செல்லும் நிலையில் "அண்ணா" துயரத்திலிருந்து இன்னும் மீள விடவில்லை.

அண்ணாவின் புகைப்படங்கள் போராட்டகாலங்களில் அழிந்தவிட்டாதால் அண்ணாவின் முகத்தை பார்க்க புகைப்படத்திற்கான தேடல்களும், மாவீரர் துயிலும் இல்லங்கள் கல்லறைகள் அழிக்கப்பட்டு அண்ணாவின் ஞாபகமாக அம்மா வைத்திருந்த கல்லும் அண்ணாவின் ஞாபகமாக இருந்த நடுகல்லையும் விட்டுவைக்கவில்லை. துயரம் மேலும் வலுப்பெற்றது.

முப்பது வருட ஆயதப்போராட்டத்தின் முடிவின் பின்னர் தமிழ் மக்களின் விடுதலையையும், பண்பாட்டுதளத்தையும் அரசியல் ரீதியாக நகர்ந்த வேண்டும் என்பதேயே "வினோதன்" கதாப்பாத்திரத்தினூடாக சொல்லப்படுகிறது.
"உன்ரை அண்ணா உனக்குள்ள உனக்கு பக்கத்திலை,உங்கட அம்மாவுக்குள்ள இருக்கிறான். அவனின்ரை வீரச்சாவுதான் உன்ன படிக்க தூண்டினது. அதுதான் உங்கடை வறுமையை நீக்கினது. அதுதான் உன்னை ஒரு புகைப்பட ஊடகவியலாளரா ஆக்கினது. இறந்த பிறகும் உன்ரை அண்ணா வாழுறான். அவன் உங்கட எல்லா வளர்ச்சிலையும் இருக்கிறான். ஒரு மாவீரனுக்கு மரணமில்லை. அவையின்ரை மரணம் மகத்துவமானது! அவையின்டை கனவு வீண் போகாது..."
பசியின் வாட்டத்தாலும், நோய்களின் பிடிகளிலும் அகப்பட்டு தன் தோட்டத்தில் விளைந்த உணவுகளை உண்ணாமல் பசியில் மரணத்தின் கடைசி தூரத்திற்க்கு சென்று வந்த மக்களை, இடப்பெயர்ந்து கலைத்து போன மக்களை குண்டுகளும் கொன்றழித்தது. சுதந்திரமாக வாழ்ந்த அந்த மண்ணில் "இரத்தவாடை" கடைசியில் முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்று முள்வேலி முகாம்களின் சித்திரவதை, துன்பங்களையும் "நடுகல்"  நாவல் சொல்லுகிறது.

நான் வாழ்ந்த மண்ணில் நான் பட்ட துயரங்களயும், நான் இழந்த உடமைகளையும் நான் இழந்த எனது உறவையும், நான் இழந்த சுதந்திரத்தையும், நான் கண்ணீர் விதைத்த மண்ணையும், கட்டிக்காத்த வாழ்வியலையும் "தீபசெல்வன்" அவர் கண் கலங்க மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறார். "நடுகல்" கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூட இல்லை, என்னோடு எனது வரலாறு எனது கையில் இருக்கும் என்று நினைக்கவில்லை. 

"தீபச்செல்வன்" அவர்கள் தமிழ்மொழிமீதும்,தமிழ் இனத்தின் மீதும் கொண்ட அன்பும், ஈடுபாடும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. நாவல் பாதுகாக்கப்படும் பின்வருகின்ற சந்ததிக்கு ஒப்படைக்கப்படும்.

ஞாயிறு, 19 மே, 2019

பறவைகளை நேசிக்கும் சிறுவன்! சுகிர்தா சண்முகநாதன்



நடுகல் விமர்சனம்

விநோதன்

இவன் தன் அண்ணாவையும், அம்மாவையும், தங்கையையும் மட்டும் நேசிக்கவில்லை. இவன் இயற்கையின் காதலன். குருவிகளையும், விலங்குளையும், இயற்கையையும் நேசிக்கின்றான். இயற்கையை நேசிப்பதாலேயே அவன் உள்ளங்களை நேசிக்கின்றான்.


வினோதனின் வாழ்வில் அரைவாசியை நானும் வாழ்ந்துள்ளேன் என்பதால் என் கடந்தகாலமும் வாசிப்பினூடே மீட்டப்படுகிறது. அவனாகவே நானும் வாழ்ந்தேன்.

அவன் அம்மா ஒவ்வொரு முகாமாகத் தன் மகனைத் தேடி அலைந்தபோது நானும் அவளைத் தேடி வீதியில் காத்திருந்தேன்.

அவன் தன் அண்ணாவின் புகைப்படத்தைத் தொலைத்தபோது நானும் எம் வீட்டிலிருந்த மாவீரர்களின் படங்களை இடப்பெயர்வின் போது வாகனத்தில் வந்த காயப்பட்ட போராளிகளிடம் ஒப்படைத்த நினைவுகள்....

கதையில் பல குறியீட்டுச் சம்பவங்களையும் உரையாடல்களையும் விதைத்துச் செல்வதனூடாக எம் மனச்சாட்சியை மீண்டும் மீண்டும் உலுக்கிச் செல்கிறார். அத்தனை குறியீடுகளும் மாண்டுபோன எம் மக்களின் சாட்சியங்களாக!

ருக்குமணி

"அவள் காணாமல் போகச்செய்யப்பட்ட பிள்ளைகளுக்காய் போராடும் தாய்மாரின் குறியீடு ஆனாள்.

படுக்கை விரிக்கப்பட்டபடி இருந்தது. அருகில் கைபேசியும் வெற்றிலைப் பையும் இருந்தன. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட அவளது சடலத்தில் பழுத்தபிலா இலைகள் ஒட்டியிருந்தன. வெறுமை கவிந்திருந்த அந்தக் கூடாரத்தில் கலகலத்த அவளது குரல் கேட்குமாப்போலொரு பிரமை. குரல்கள் எங்கும் செல்வதில்லை."

மறக்கவிரும்பும் நிகழ்வுகளையும், நினைவுப்பெட்டகத்தில் பாதுகாக்கும் பல மறக்கமுடியாத பல நினைவுகளையும் விரும்பியும் விரும்பாமலும் மீட்டியபடியே கடக்கிறேன்!

இறுதிப்போரில் பின் முகாம்களில் அடைக்கப்பட்ட காலங்களை நான் அனுபவிக்காவிட்டாலும் இங்கிருந்துகொண்டு நாம் பட்ட வலியும் வேதனையும் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை. இந்த இடத்தில் அவள் சொன்ன வார்த்தைகளை இன்று நினைத்தாலும் உயிர்போகிறது. "எனக்கு ஒன்று நடந்தால் என் பிள்ளைகளுக்கு நீதான் பொறுப்பு" ஓர் அன்னையால் இவ்வாறு சொல்ல முடியுமென்றால் அவளின் நிலை எத்தகையது?

"முட்கம்பிகள் மாத்திரம் வாதை தருவதல்ல. முள்வேலி முகாமின் காற்றும் வாதைதான். தண்ணீரும் வாதை தான், உணவும் வாதைதான், கூடாரங்களும் வாதைதான், முள்வேலி முகாமின் அறிவிப்பும் வாதைதான். அங்குள்ள வைத்தியசாலைகளும் நிரம்பிய மலக்குழிகளும் வாதை தான்"

சிறுவர்களின் உலகத்தில் எந்தவித போலித்தனமும் இருப்பதில்லை. வாழ்வை அதன் போக்கில் வாழவும், தம் கண்முன்னே விரியும் உலகின் கண்ணாடியாய் தம்மை இனங்காட்டவும் அவர்கள் தயங்குவதே இல்லை.

"ஆனால் உன்ர அண்ணா உனக்குப் பக்கத்திலை , உனக்குள்ள உங்கடை அம்மாவுக்குள்ளை இருக்கிறான். அவனின்ர வீரச்சாவு தான் உன்னைப் படிக்கத் தூண்டினது. அதுதான் உங்கடை வீட்டின்ரை வறுமையை நீக்கினது. அதுதான் உன்னை ஒரு புகைப்பட ஊடகவியலாளன் ஆக்கினது. இறந்த பிறகும் உன்ரை அண்ணா வாழுறான். அவன் உங்கடை எல்லா வளர்ச்சியிலையும் இருக்கிறான். ஒரு மாவீரனுக்கு மரணம் இல்லை. அவையின்ர மரணம் மகத்துவமானது. அவையின்டை கனவு வீண்போகாது வினோதன் " இதுதான் எங்கள் பலம்!

எந்தவித எதிர்பார்புகளுமற்று நேசிக்கத்தெரிந்த உன்னதமானவர்களைப் பார்த்து வளர்தவளாக வினோதனைப் போலவே நானும்!

-சுகிர்தா சண்முகநாதன்

சனி, 18 மே, 2019

தஞ்சையில் நடுகல் நாவல் கலந்துரையாடல்!



பத்துவருடத்து கொடுங்கனவை பற்றியும் அந்த கனவின் வலியை சுமந்து நின்றுக்கொண்டிருக்கிற ஓர் படைப்பை பற்றியும் நினைவுக்கூறுவதற்கும் பேசுவதற்கும் நிறைய இருக்கிறது. வாய்ப்பிருக்கக் கூடிய தோழர்கள் நண்பர்கள் உறவினர்கள் தஞ்சை சுற்று வட்டாரப் பகுதி மக்கள் என அனைவரும் வருக..!
வரும் 26 ஆம் தேதியன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் ஈழக் கனவுக்காக நடுகல்லாகி துயில்வோரை நினைவுக் கூறுவதற்கும் தீபச்செல்வனின் 'நடுகல்' நாவல் குறித்து கலந்துரையாடுவதற்கும் நண்பர்களே! தோழர்களே! தயாராகுங்கள்.
-தினேஷ் பழனி ராஜ்


'நடுகல்' நாவலில் இருந்து


“நாங்கள் மெனிக்பாம் முகாமுக்கு வந்து சேரக்குள்ளை குறை உயிரோடை வந்ததைப் போலத்தான் இருந்தது. ஒருநாள் முழுக்க பஸ்ஸிலை எங்கை எங்கையோ எல்லாம் கொண்டுபோயிட்டு பிறகு கொண்டு வந்து இறக்கினாங்கள். வந்ததும் வெறும் நிலத்திலை விழுந்து கிடந்தன். அப்பிடிக் களைப்பு ”

அக்கொடிய நாட்களின் கதையை சொல்லும் அம்மாவின் முகத்தில் முடிவற்ற அலைச்சல். கந்தக நெடில். பேராறாய் குருதி. விழிகளில் லட்சம் பிணங்கள். 

“கிளிநொச்சியிலை எறிகணைகள் வந்து விழத்தொடங்கின ஒருநாளில் எங்க இடம்பெயர்ந்து போறது என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை... இரண்டு இயக்கப் பொடியள் வந்து வீட்டைக் கழட்டி வீட்டுச் சாமானுகளை எல்லாம் ரக்டரிலை ஏத்திவிட முரசுமோட்டைக்குப் போனம். அங்கையும் கன நாளில்லை. ஒருமாதந்தான் இருந்தனாங்கள். ஒருநாள் முரசு மோட்டைச் சந்தியிலை இருக்கிற செல்லையா கடைக்கு மேலை கிபிர், குண்டுகளை கொண்டு வந்து கொட்டிச்சுது. சனங்கள் எல்லாம் துடிதுடிச்சு சிதறிச் செத்துதுகள்.

அந்த இடமே இரத்த வெள்ளம்!

ஒரு பின்னேரம். இனி இஞ்சை இருக்க ஏலாது வெளிக்கிடுங்கோ எண்டு இசைப்பிரியன் வந்து சொன்னான். ருக்குமணி அவனைத் தேடிக்கொண்டு திரிஞ்சவள். உன்ரை அம்மா தேடினவள் எண்டு சொல்லுவமெண்டு பாக்க அவன் ட்ரக்கிலை ஏறி பரந்தன் பக்கமாய் போயிட்டான். கிளிநொச்சிப் பக்கம் பெரிய சண்டை நடக்கப் போகுது எண்டு விளங்கிச்சுது. 


அண்டைக்கு இரவோடு இரவாய் தர்மபுரத்திற்கு இடம்பெயர்ந்தம். நெத்தலியாற்றுப் பிள்ளையாரின் அருளாலையோ என்னவோ அந்தக் கோயிலின்டை தாழ்வாரத்திலை மூண்டு மாதங்கள் இருந்தம்...

ஆனால் பிறகு எறிகணையள் அந்த இடத்தையும் விட்டுவைக்கேல்லை. அங்கயிருந்தும் துரத்தினாங்கள். செல் வந்து விழேக்கையெல்லாம் பிள்ளையார் கோயிலுக்குள்ளை இருப்பம். பிறகு பிள்ளையாருக்கு மேலையும் செல் வந்து விழுத் துவங்கிச்சுது. வானத்தை நிமிர்ந்து பாத்தால் கிபீர் விமானங்கள். அங்கயிருந்தும் இடம் பெயர்ந்தம்...

முறிகண்டியானே! இது என்ன சோதனை? துடிச்சுப்போனம்…

தர்மபுரத்திலையிருந்து சுதந்திரபுரத்துக்குப் போனம். தர்மபுரத்திலிருந்து சுதந்திரபுரத்திற்கு சைக்கிளிலை போனாலும் அரை மணித்தியாலமே கூட. ஆனால் நாங்கள் போய்ச்சேர ஒருநாள் ஆகிட்டுது. ஒவ்வொரு அடியாக வைச்சுவைச்சு நடந்தம். அப்பிடி சனநெரிசல். வானத்திலை கிபீர். செல்லுகள் பக்கத்திலை வந்து விழுகுது. எத்தனையோ பேர் ஒருத்தரை ஒருத்தர் தவறவிட்டிட்டு தேடித் துடிச்சுதுகள். பசி ஒருபக்கம். குடிக்க தண்ணிகூட இல்லை. நடக்கவும் முடியேல்லை. ஆனால் ஆமி கலைச்சுக் கலைச்சு செல் அடிச்சுக்கொண்டே இருந்தான்..”

தொடர்ந்து பேச முடியாமல் கத்தியழுதாள் அம்மா.

“என்னாலை அதுக்குள்ளை ஒரு அடிகூட எடுத்து வைச்சு நடக்க முடியேல்லை அண்ணா” கண்களை துடைத்து, தொடர்ந்தாள் தங்கச்சி. 

“சுதந்திரபுரத்திலை இருந்த நாட்கள் முழுதும் பங்கரிலைதான் எங்கடை வாழ்க்கை. வெளியிலை தலைகாட்ட ஏலாது. ஒரு கிழமைக்கும் மேலை தொடர்ந்து பங்கருக்குள்ளையே இருந்தம். வானத்தைப் பார்க்கேல்லை. இரவு, பகல் தெரியாது. ஒரு பக்கம் இடப்பெயர்வு. மற்றப் பக்கம் சனம் செத்து விழுகுதுகள். ஆர் செத்தது? ஆர் இருக்கிறது எண்டு தெரியாது..

சனங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகுதுகள். பங்கர் எல்லாம் சவக்குழி ஆகிட்டுது. அந்த மரணக் குழியளிலை பதுங்கிடந்தம். ஒரு தறப்பாள் கொட்டில்தான் கொஸ்பிட்டல். அங்கை ஈழப்பிரியன் அண்ணாதான் காயப்பட்ட சனங்களுக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்தார். 

சண்டை நிண்ட பாடில்லை…

நல்ல நினைவிருக்குது. அண்டைக்கு மாசி நாலாம் திகதி 2009ஆம் ஆண்டு. அண்டைக்குத்தான் இலங்கையின்டை சுதந்திரதினமாம். வழமையைவிட அண்டைக்குத்தான் செல்லடி கூடவாயிருந்தது. அண்டைக்குத்தான் நிறையச் சனங்கள் கொல்லப்பட்டதுகள். 

அப்பிடிக் குண்டு மழை பொழிஞ்சாங்கள் அண்ணா...

அண்டைக்குத்தான் ஜீவா அண்ணையும் அவரின்டை மனுசியும் மூண்டுபிள்ளைகளும் ஒரு செல்லிலை ஒரு நொடியிலை அந்த இடத்திலையே செத்தவை. விமலன் அண்ணை காயப்பட்டு இரத்தம் கொட்டக் கொட்ட இரண்டு பிள்ளையளை தூக்கிக்கொண்டு ஓடினார். கிளி அக்கா எங்களுக்குப் பக்கத்தில் பங்கரை விட்டு வெளியிலை வந்து கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தவா.. ஒரு செல் வந்து அவாவுக்கு மேலை விழுந்துது. அந்த பங்கர், எங்கடை பங்கர் எல்லாம் சதையும் இரத்தமும். அவான்டை பிள்ளையள் துடிச்சுதுகள். அப்பிடி எத்தினை பேர் சாகிறதை இந்தக் கண்ணாலை பாத்தனான் அண்ணா?

மறக்க ஏலாத கொடுமையள் அண்ணா!

பசிச்சழுத பிள்ளையளுக்காக ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தவையளும் குழந்தைகளுக்கு பால் ஊட்டிக் கொண்டிருந்தவையளும் எண்டு எத்தனை பேர் செத்திச்சினம்? எப்ப சாவுவரும்? அடுத்து ஆர் சாகிறது எண்டு தெரியாத வாழ்க்கை. எப்ப குண்டு வரும்? எங்கயிருந்து குண்டு வரும் எண்டு தெரியாத நிலைமை.

செத்தவையளை அடக்கம் பண்ண ஆளில்லை. குறை உயிரிலை துடிக்கிற ஆக்களை தூக்கி மருந்து காட்ட ஆளில்லை. 

அப்பயெல்லாம் உன்ரை குரலைக் கேக்க உன்னைப் பாக்க ஏங்குவம் அண்ணா… உனக்கு வந்து போன் எடுக்கவும் ஏலாத மாதிரி செல்லடி.. இடைகிடை குனிஞ்சு வேலிக் கரையோரமாய் நடந்து கொமினிக்கேசனுக்கு வந்து அம்மா கோல் எடுக்கிறவா.. அம்மா பத்திரமாய் திரும்புவாவோ எண்டு பங்கருக்குள்ளை கிடந்து துடிப்பன்… 

அப்ப அங்க சரியான பனி. தாங்க ஏலாத குளிர். ஒரு நாள் அங்க இருந்தும் இடம்பெயர்ந்து வந்து சேரும்போது எனக்கும் அம்மாவுக்கும் வருத்தமும் வந்திட்டுது. எங்களை மாதிரி கனபேருக்கு வருத்தம். அதுக்குள்ளை எங்கை மருந்துக்குப் போறது? சுதந்திரபுரத்திலையும் இருக்க முடியேல்லை. பிறகு இரணைப்பாலையிலை மூண்டு நாள்தான் இருந்திருப்போம். 

அங்கையும் எங்களை இருக்க விட்டாங்களே?...

இரணைப்பாலையை விட்டு இரட்டைவாய்க்காலுக்கு வந்தம். இரட்டைவாய்க்கால் கடற்கரை முழுதும் இடம்பெயர்ந்த சனங்கள். அங்கையும் ஒருமாதம் தான் இருந்திருப்பம். பிறகு வலைஞர்மடத்துக்கு வந்தம். ஒரு இடத்திலை ஒரு பொழுதுகூட தங்கமுடியேல்லை. துரத்தித் துரத்தி செல்லடி. பாதுகாப்பு வலயங்களுக்குள்ளைத்தான் கூடச் செல்லடி. அதுக்குள்ளை போன திருவிழியின்டை குடும்பமே இல்லை... பரிதிநிலா சரியான காயத்தோடையும் சண்டையிலை நிண்டவள். அவள் வீரச்சாவு எண்டு அறிஞ்சு துடிச்சம். வித்துடலைத் தேடி அவளின்டை அம்மா செல்லுகளுக்கு இடையாலை ஊந்து ஊந்து அலைஞ்சதை எப்பிடி மறப்பம் அண்ணா? ஆனந்தி அக்கா ஒரு பக்கம் மனுசனை தேடித் திரிஞ்சா…

வலைஞர் மடத்தில் பார்த்ததுகளை என்னாலை ஒருக்காலும் மறக்க ஏலாது. எங்கை பாத்தாலும் சாவும் சடலங்களும்தான். ஒரே இரத்த வாடை. வலைஞர்மட ஆஸ்பத்திரி முழுக்க காயப்பட்ட ஆக்கள். காயங்கள் எல்லாம் நாறி மணக்க வெளிக்கிட்டுட்டுது. மருத்துவமனை காணிமுழுக்க செத்த சனங்கள்தான். ஒண்டுக்கு மேலை ஒண்டாய் அடுக்கிக்கிடந்தது. அய்யோ அது மருத்துவமனையா சவச்சாலையா எண்டு தெரியேல்லை... மருத்துவப் போராளியள் மருந்தில்லாமல் வெறும் துணியலை கிழிச்சுக் கிழிச்சு காயங்களுக்குக் கட்ட, இரத்தம் நிக்காமல் கொட்டிச்சுது.. அநாதையாய் செத்துக் கிடந்தா தவமணி அக்கா. செந்தூரனும் கடைசியலை இயக்கத்துக்குப் போட்டான். 

இரத்தினம் அண்ணையும் சண்டையிலை நிண்டு உதவியள் செய்தார். இரண்டு பேரும் வீரச்சாவு.

ஆருக்கு சாவு வரும்? யார் தப்புவினம் எண்டெல்லாம் ஆருக்கும் தெரியாது. உயிரை கையிலை பிடிச்சுக் கொண்டிருந்தம். எல்லாமே எல்லாருமே சாவுக்கு முன்னாலைதான்.. வலைஞர் மடத்திலையிருந்து கடைசியாய் முள்ளிவாய்க்காலுக்கு வந்தம். இதுவரைக்கும் சந்திச்சதைவிட சரியான துன்பங்கள்.. எங்கை பாத்தாலும் செத்த பிணங்கள்.. கால் வைக்கிற இடமெல்லாம் இரத்தம். தூக்கவும் பாக்கவும் அழவும் ஆக்களில்லை.. செத்தவையளை மணலாலை போட்டு சிலர் மூடிச்சினம். பெத்த தாயை இழந்து தனியா அழுகிற குழந்தை.. செத்துப்போன குழந்தையளை பாத்து துடிக்கிற தாய்.. உடம்பிலை காய் கால் இல்லாமல் துடிக்கிறவையள்… 

பிணங்களை விட்டிட்டு போக ஏலாமல் கத்திற சனங்கள்.. எல்லாருக்கு மேலையும் திரும்பவும் குண்டுகள்தான்.. எல்லாரையும் திரும்பத் திரும்ப துப்பாக்கிச் சன்னங்கள் வந்து தாக்கிச்சுது… ஊழித்தீயாய் சண்டை. ஈழப்பிரியன் வீரச்சாவடைஞ்சு அவனின்டை வித்துடலை இரண்டு இயக்க அண்ணமார் முள்ளிவாய்க்கால் மணலிலை விதைச்சினம். 

முள்ளிவாய்க்காலே பிண வாய்க்கால் ஆகிட்டுது. சண்டை பிடிச்சு வீரச்சாவடைஞ்ச ஒரு இயக்க அண்ணை துவக்கை இறுக்கிப் பிடிச்சபடி கிடந்தார். எங்களுக்கு கிட்ட ஆமி வந்திட்டான். கனக்கப் பிணங்களைத் தாண்டி வந்துதான் ஆமிட்டை சரணடைஞ்சம். பிணங்கள் மிதக்க இரத்தக் கடலாய்ப் போன நந்திக்கடலுக்குள்ளாலைதான் ஆமிட்டை சரணடைஞ்சம். இயக்கத்தின்டை ஆயுதங்களை கைப்பற்றின மாதிரியும் ஏதோ அடிமையளை பிடிச்ச மாதிரியும் ஆமி எங்களை கொண்டு போனாங்கள்… எங்களோடை வந்த ஞானம் அண்ணையையும் அவரின்டை மனுசி பிள்ளையளையும் இயக்கமெண்டு, ஆமி வேற பக்கமாய் கூட்டிக்கொண்டு போனான்.. போட்டிருந்த உடுப்பைவிட ஒண்டும் இல்லை. வெறும் கையோடை வந்தம்.” 

தங்கச்சி சொல்லி முடிக்கையில் வானம் கவிழ்ந்து போயிற்று.

வெள்ளி, 10 மே, 2019

வீடு திரும்புதல்! முதன் முதலாக


2000ஆமாம் ஆண்டு. அப்போது இடம்பெயர்ந்து கந்தபுரம் என்ற ஊரில் வசித்துக் கொண்டிருந்தோம். போர்க்களத்தில் போராளிகளுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கிராமமாக மக்கள் செல்வது வழக்கமானது. பதுங்குகுழியமைத்தல், உணவு சமைத்தல் போன்ற உதவிகள் ஒத்தாசைகளை செய்வதற்காக செல்லுவதுண்டு. அப்படிச் செல்பவர்கள் சண்டைகளில் சிக்கி இறப்பதும் உண்டு. பின்னர் அவர்கள் எல்லைப் படை வீரர்களாக புலிகளால் கௌரவிக்கப்படுவார்கள். அப்போது எங்கள் ஊரில் இருந்தும் பலர் போர்க்களத்திற்குப் புறப்பட்டார்கள். எனக்கு அப்போது 17 வயது. இதனால் அனுமதி மறுக்கப்பட்டது. நானும் என்னுடைய நண்பன் ஒருவனும் எப்படியோ அந்தக் குழுவில் புகுந்து கொண்டு லாரிக்குள் ஏறிக்கொண்டோம்.

எனது சகோதரன் இயக்கத்தில் இருப்பதால் அவனை பார்க்கலாம் என்பதற்காகவுமே புறப்பட்டேன். அப்போது, ஆனையிறவை புலிகள் இயக்கம் கைப்பற்ற தயாராகியிருந்த நாட்கள். பூநகரி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தது. பூநகரியின் கௌதாரி முனை என்ற பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய முகாங்கள் இருந்தன. கௌதாரிமுனை மிகுந்த முக்கியமான மையமாக செயற்பட்டது. அங்கு சண்டைகள் மூழ்வதுடன், யாழ்ப்பாணத்தில் இருந்தும் இராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதுண்டு. என்றாலும் கௌதாரி முனை ஊடாக புலிகள் யாழ்ப்பாணத்திற்கும் இரகசியமாக ஊடுருவி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.

கந்தபுரத்திலிருந்து புறப்பட்ட, மக்களை ஏற்றிய லாறி, பூநகரி நோக்கி விரைந்தது. பூநகரி மக்கள் யாருமற்ற பாழடைந்து காணப்பட்டது. பழமையான அந்த நகரத்தின் கடைத்தெருக்கள் எல்லாம் பற்றை மண்டியிருந்தது. எங்கு பார்த்தாலும் உருக்குலைந்த மண்மேடுகளும் இராணுவமுகாங்களுமாய் ஆளரவமற்றிருந்தது. நெடுங்காலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து 1993இல் புலிகளால் கைப்பற்றப்பட்டபோதும், 1996 கிளிநொச்சியின் இராணுவத்திடம் வீழ்ந்த பின்னரும்  யாழ்ப்பாணம், ஆனையிறவில் நிலை கொண்ட இராணுவத்தினரால்  அங்கு மக்கள் வாழமுடியாத நிலை நீடித்தது. 

அங்கு நேற்றும் கடுமையான சண்டை மூண்டதென லாறியில் இருப்பவர்கள் பேசிக்கொண்டனர். அண்ணா, அங்கே நிற்கக்கூடும், அல்லது அவனை பற்றிய தகவல்கள் எதையாவது பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். போராளிகள், எல்லைகளில் காவல் இருந்தனர். போராளிகளின் முன்னரங்குகளும் தெரிந்தன. எதிர்திசையில் இராணுவத்தினரின் காவலரண்களும் நடமாட்டங்களும் தெரியும். திடீரென விமானங்கள் வந்து தாக்கும். இராணுவத்தினரின் படகுகள் கடல் வழியில் தென்படும். போராளிகள் கரையிலிருந்து தாக்குவார்கள். போராளிகளின் படகுகள் கடலுக்குள் சென்று இராணுவத்தை தாக்கும்.

என்ன நடக்கப் போகிறதே என்ற அச்சம். “பாடியாய்தான் வீட்ட போகப் போறம்..” என்று என் நண்பன் ஒருபுறம் கிலியை ஏற்றுவான். அம்மா, தங்கச்சி எல்லோரையும் நினைக்க திரும்ப போய்விடலாம், பொறுப்பாளரிடம் சொல்லிவிடலாம் என்றும் தோன்றியது. போராளிகளின் சிரிப்புச் சத்தம் போர்க்களத்தை கலகலப்பாககியது. ஒருவரை ஒருவர் கிண்டலடித்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டும் இருந்தனர். போர்க்களத்தின் நெருக்கடிகளைக்கூட மகிழ்ச்சியாக அனுபவித்துப் பேசும் அவர்களைப் பார்க்கையில், எனக்குள் இருந்த பயம் கொஞ்சம் தணிந்தது. அண்ணாவை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அதிகரித்தது.

கடுமையான சண்டைக்குள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, மீன்களை அள்ளி வந்து போராளிகளுக்கு கொடுக்கும் மீனவர்களிடமும் அண்ணாவை கண்டீர்களா என்றும் விசாரித்தேன். நானும் எனது நண்பனும் போராளிகளுக்கு சமைத்த உணவுகளை எடுத்துச் சென்று கொடுப்பதுண்டு. போராளிகள், “தம்பிக்கு எத்தினை வயது” என்று கேட்கவும், 18 முடிந்துவிட்டது என்றேன். அவர்கள் என் பதிலில் நம்பிக்கையின்றிப் பார்த்தனர். எங்களுடன் வந்தவர்கள் மண்மலைகளை அண்டிய பிரதேசங்களில் பதுங்குகுழிகளை அமைத்தார்கள். அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை செய்வதுமாய் நகர்ந்தன நாட்கள். கிடடத்தட்ட ஒரு வாரம் கழிந்துவிட்டது.

ஒரு நாள் நானும் என்னுடைய நண்பனும் பதுங்குகுழி அமைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உணவை எடுத்து சென்று கொண்டிருந்தோம். அன்று பாரிய சமருக்கு இராணுவம் தயாராகிக் கொண்டிருந்தது. மண் மலைகளிலிருந்து கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்க, வானத்தில், விமானங்கள் வந்து குவியத் தொடங்கின. வெட்டை வெளியான அந்தப் பகுதியில் ஒரு பதுங்குகுழியும் இல்லை. எங்கு பதுங்குவது என்று தெரியாது நானும் அவனும் ஒடினோம். போராளிகள் உடற்கரைகளிலும் மண் மலைகளிலும் போராளிகள் உசாராகிக் கொண்டிருந்தனர். மற்றொரு புறத்தில் யாழ்ப்பாணக் கரைகளிலிருந்து செல்கள் வந்து விழத் தொடங்கின. நானும் எனது நண்பனும் தூர்ந்துபோன கிணறு ஒன்றுக்குள் குதித்தோம்.

வான்வழியாகவும் தரைவழியாகவும் கடும் தாக்குதலை நடத்தியது இராணுவம். போராளிகள் பதிலுக்கு யாழ்ப்பாணம் நோக்கி, கடல் வழியாக பீரங்கிக் தாக்குதலை நடத்தினார்கள். போராளிகளின் நகர்வுகளும் வானங்களின் நகர்வுகளும் நிறுத்தப்படவில்லை. விமானங்கள் குண்டுகளை கொட்டி அந்த இடத்தையே சின்னா பின்னாக்கியிருந்தது. காயப்பட்ட போராளிகள் மணல்மலை முகாங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். இரண்டு போராளிகள் வந்து அந்தக் கிணற்றிலிருந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் உயிரோடுதான் இருக்கிறேனா என்று யோசித்தேன். நான் நன்றாகவே பயத்தில் அதிர்ந்து போனேன். வார்த்தை ஒன்றும் வாயில் வரவில்லை. எனது நண்பன் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். மணல்மலைகளில் சுற்றித் திரிவதை நிறுத்திவிட்டு, பாசறையின் அறை ஒன்றுக்குள் பேசாமல் படுத்திருந்தேன்.


கிராமங்களிலிருந்து மக்களை அழைத்து வரும் செயற்பாடுகளுக்கான போராளிப் பொறுப்பாளர் பாசறை வந்ததும் என்னையும் என் நண்பனையும் கண்டு அதிர்ந்துபோனார். “ஆர் இவர்களை அழைத்து வந்தது” என்று பேசிக் கொண்டிருந்தார். எந்தப் பாடசாலையில் கல்வி கற்கிறீர்கள், எத்தனையாம் வகுப்பு என்று கேட்டார். நான் அண்ணாவை தேடி வந்ததைப் பற்றி சொன்னேன். உடனேயே எங்களை தன்னுடைய ட்ரக்கில் ஏற்றிக் கொண்டார். அண்ணா பற்றிய விபரங்களை பெற்றுக்கொண்டார். விரைவில் அண்ணாவை விடுமுறையில் வீட்டுக்கு அனுப்புவதாகவும் சொன்னார். நாளையே பாடசாலை போகவேண்டும் என்றும் பாடசாலைக்கு வந்ததை உறுதிப்படுத்த வகுப்பாசிரியரின் கையப்பத்துடன் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் என்றும் சொல்லி வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார் அந்தப் போராளி. வெகு நாட்கள் அண்ணாவுக்காக காத்திருக்க, ஒருமுறை விடுமுறையில் வீடு வந்தான். அதன் பிறகு, வீரமரணம் அடைந்து வித்துடலாய்தான் வீடு திரும்பியிருந்தான். 

நன்றி - விகடன் தடம்

வியாழன், 9 மே, 2019

ஈழத்தின் துயரைச் சொல்லும் நாவல் – “நடுகல்” அகிலா ஸ்ரீதர்


ஈழ மக்களின் தீரா துயரங்களை இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் தீபச்செல்வனின் நாவல் இந்த “நடுகல்”. பிரேம் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் பற்றிய தேடுதல் தான் நடுகல்..! 


2009 மே 18ல் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பகுதியில், மிகப் பெரிய இனப்படுகொலையின் துயர வரலாற்றைச் சுமந்து காற்று ஓலமிட்டு அலைகிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகான காட்சிகளையும், வாழ்க்கையையும் ஈழ எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி கிளிநொச்சி பகுதியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை தான் தீபச்செல்வனின் ’நடுகல்’ நாவல்.


ஒரு புத்தகம், வாசிப்பவரை மகிழ்ச்சியுற செய்யும், நெகிழ்த்தும்.. கூடவே கைப் பிடித்து பயணிக்க வைக்கும். கண்ணீர் சிந்த வைக்கும். ஆனால், விமானத்திலிருந்து குண்டுகள் முன்னும் பின்னும் மாறி மாறி விழ., உயிரைக் கையில் பிடித்தபடி பதைபதைப்போடு நம்மையும் அவர்களோடு அகதியாய் ஓட வைக்கிறது. 

மாவீரர் தினத்தன்று இயக்கப் போராளியாய் வீரமரணமடைந்த அண்ணனுக்கு அஞ்சலி செலுத்த மாவீரர் துயில் இல்லம் செல்லும் தம்பியின் குரல் வழியே இக்கதை துவங்குகிறது. அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும் மரங்கள் அனைத்துமே மரணமடைந்த ஒவ்வொரு வீரரின் பெயரைச் சொல்லி அவர்கள் தாய்க்கு தாங்களே பிள்ளைகளாக நிற்கின்றன. 


கிளிநொச்சி தமிழீழக் கட்டுப்பாட்டில் இருந்த போது மிகச் சுதந்திரமாக இருந்த மக்கள் மனநிலையையும், அதை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் உருக்குலைந்து போய், வாழ்விடத்தை நீங்கி அகதியாய் அலைந்த மக்களின் துயரங்களையும் நமக்குள் கடத்தி எதுவும் செய்ய இயலாமல் பார்க்க மட்டுமே செய்யும் நம்மைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகின்றன. 

ஓர் இயக்கத்தின் ஒழுங்கை, கட்டுப்பாடுகளை, மக்கள் மீதான அக்கறையை, மக்கள் இவர்கள் பால் வைத்திருந்த நம்பிக்கையைச் சித்தரிக்கின்ற இக்கதை , பிரபாகரனை சிறு வயதிலிருந்தே மனதிற்குள் மிகப் பெரிய ஹீரோவாகக் கொண்டாடும் எனக்கு மிகவும் நெருக்கமாகிப் போனதில் ஆச்சர்யமில்லை. 

ஆயுதங்களை மட்டுமே நம்பிய புலிகளின் அரசியல் பார்வை சிறப்பாக இல்லாமல் போனதே கூட புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குருதி தோய்ந்த ஈழத்துப் படைப்புகள் இன்றளவும் இனப் படுகொலையின் சாட்சியங்களாய் வரலாறாக நம் முன் நிற்கின்றன. 

அந்த தேசத்தில் சிறுவர்களின் விளையாட்டும் ஆர்மி, இயக்கம் என்று இரு குழுக்களாகப் பிரிந்து இராணுவத்தை விரட்டுவதாக அமைந்திருப்பது பங்கர் குழிக்குள் பிறந்து வளர்ந்த சிறுவர்களுக்குள் இயல்பாகக் கலந்திருக்கும் போராட்டக்குணத்தை எடுத்துக் காட்டுகிறது. சிறுவயதிலிருந்தே இயக்கத்தைக் கண்டு பிரமித்து இணைந்து வீர மரணமடைந்த அப்போதைய பல தமிழ் இளைஞர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி வெள்ளையன் என்று இயக்கப் பெயர் கொண்ட பிரசன்னா.. ஆனால் தகப்பனாகப் பாவித்த, நேசித்த அண்ணனைப் போராட்டம் காவு கொண்டு விட, குடும்பத்தோடு இணைந்து அமைதியாக வாழத் துடிக்கிற, அதற்கு அரசியல் தீர்வு தேடுகின்ற இன்றைய ஈழ இளைஞர்களின் பிரதிநிதி விநோதன். 

தோட்டத்தில் விளைந்த அத்தனையும் விட்டு அகதியாய் நகர்ந்த பின்னும் பசிக் கொடுமையால் போரின் நடுவே தானிருந்த வீட்டிற்கு வந்து விளைந்தவற்றை எடுத்துச் செல்லும் போது, இராணுவத்திடம் மாட்டிக் கொண்டு உயிரை விட்ட அன்ரனியைக் காணும் போது அடுத்த கவளம் சோறு உள்ளிறங்க மறுக்கிறது. இறந்த அண்ணனின் ஒரே ஒரு புகைப்படத்தைத் தேடி அலையும் தம்பியின் வழியே, வாழ்வின் இன்றியமையாத கணங்களை என்றும் நினைவிருத்தும் புகைப்படங்களின் அவசியம் விளங்குகிறது. 


தாய் ஒரு வீட்டில் வேலைக்காரியாகப் பணி புரிய., குருகுலத்தில் தங்கை படிக்க, திசைக்கொருவராக சிதறிக் கிடக்கும் குடும்பத்தை இணைக்க விநோதன் நன்கு படித்துத் தேறி போட்டோ ஜர்னலிஸ்ட் ஆகிறான். இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்ட சூழலில், இனி அரசியல் ரீதியான தீர்வுகளை நோக்கித் தான் நகர வேண்டும் என்பதை இந்நாவல் மூலம் புரிய முடிகிறது. 

போர்க்களக் காட்சிகளோடு குருதியோடும் இக்கதையில் ஆங்காங்கே நம்மை நிறுத்துகின்றன, மருதமும், நெய்தலும் அழகுற அமைந்த கிளிநொச்சி நிலப்பரப்பின் வர்ணனைகள்.. அழகென்பதே ஆபத்தானது என்பதையும் நிலை நிறுத்துகிறது. 

இக்கதை முழுவதும் தீபச் செல்வனின் இயல்பான எளிதான மொழி விரவிக் கிடந்தாலும், இனப் போராட்டத்தின் வீரியத்தை, வலிகளை வலிமையாக நமக்குள் அம்மொழி கடத்துகிறது. 

இயக்கத்தை, புலிகளை ஹீரோக்களாகக் காண்பிக்கிற ஒரு சார்புடைய நாவல் என்ற விமர்சனங்கள் ஆங்காங்கு வெளிப்பட்டாலும், ஈழத் துயரை, கிளிநொச்சிப் பகுதியிலிருந்து பதிவிட்ட இக்கதை ஈழ இலக்கியத்தில் தவிர்க்க இயலா இடத்தைப் பிடிக்கிறது.. அனைவரும் வாசித்தறிய வேண்டிய நாவல் தீபச்செல்வனின் ”நடுகல்” 

Read more at: http://vasagasalai.com/nadukal-novel/

செவ்வாய், 7 மே, 2019

ஒட்டுமொத்த மௌனத்தின் தனிக்குரல்! - சுரேகா பரமன்



"நினைவெல்லாம் அவனது முகம் அப்பியிருந்தது. மனத்திரையில் அண்ணா நடக்கிறான். பின்னர் படமாகத் தொங்குகிறான் . எழுத முடியாது நெஞ்சிற்குள் முட்டி மோதிக்கொண்டு நிற்கும் ஒரு கவிதையைப் போல அவனது முகம் நெருடுகின்றது "

மண்ணின் மீதும்/ மக்கள் மீதும் /குடும்பம் மீதும் / எதிர்காலத்தலைமுறை மீதும் தணியாத காதல் கொண்ட ஒரு தமையன், தன் அன்பான அம்மா தம்பி தங்கையை விட்டு , தன்னின மக்களின் விடுதலைக்காக எப்படி தன்னை ஓர் ஆயுதமாக்குகின்றான் என்பது ஒரு புறமாகவும் , மறுபக்கம் அவனின் வீரமரணம் குறித்த நீண்ட செய்திகளையும் , தியாகத்தையும் போற்றித் துதிக்கவும் முடியாது , பேசித்திரியவும் முடியாது அவனது தம்பியும் அந்தக்குடும்பமும் சுற்றமும் தவிக்கும் தவிப்புக்களும் ஏக்கங்களும் கண்ணீர் சுமந்த நினைவுகளுமே தீபச்செல்வனின் நடுகல் நாவலின் மையவோட்டம்.

சிறு வயதில் தந்தை இல்லாத ஏக்கத்தில் தந்தையின் வரவை எண்ணிக்காத்திருக்கும் தம்பி வயதாக வயதாக தந்தையின் வெறுமையை உணர்வதும் பின்னரான காலங்களில் தமையனின் அன்பை தன்னுடன் இருத்திக்கொள்வதற்காக பாடுபடுவதுமென நெஞ்சைக் கனதியாக்கும் , உணர்வுக்குழம்பாக நடுகல் நகர்கின்றது.

வீட்டிலே விடுமுறை ஒன்றில் வந்த தமையன் முன் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் தம்பியிடம்

"தம்பி எழும்பிச் சாப்பிடு ... " என்று சொல்லிக்கொண்டே உடுப்புக்களை மடித்தான் அண்ணா.
.....

"நீ நாளைக்குப் போக மாட்டேன் எண்டு சொல்லு சாப்பிடுறன் "

......

"நல்ல விளையாட்டுத்தான் "
.......
"எனக்கு என்ரை அண்ணா வேணும் "

"எனக்கும் அண்ணா வேணும் அம்மா " தங்கைச்சியும் தன் பங்குங்கு அனுங்கினாள் "

ஒரு குடும்பத்தின் பாசத்தை / பிரிவாற்றாமையை வெளிப்படுத்திக்கொள்ளும் பாங்கில் கதாபாத்திரங்கள் நகர்கின்ற போதும் 

பெரும்பாலும் எல்லாக்குடும்பங்களின் நிலையும் இதுவாகத்தான் ஒரு காலத்தில் இருந்தது என்பதையும் நாவல் சொல்லாமல் சொல்லிச்செல்கின்றது.

கதாபாத்திரங்களுடன் நாம் அறிந்த அனுபவித்த கேட்ட வெவ்வேறு மாந்தர்களையும் நினைவூற்றிச்செல்லும் பெருவெளியாக இந்த நாவல் விரிந்து செல்வது ஆசிரியரின் மொழி வீச்சு என்றே சொல்ல வேண்டும். அனுபவத்தின் வழி நிற்கும் மொழிக்கு எப்போதும் செறிவும் கனதியும் அதிகமாகவே இருக்கும்.

நாவலில் வருகின்ற தம்பியின் வாயிலாக , தமையனின் நாடு , வீடு குறித்த அனைத்துக்கனவுகளையும் இரத்தமும் சதையும் வலியுமாக வாட்டியெடுத்து வாசகர்களின் உள்ளங்களை நெகிழவைத்திருக்கும் ஆசிரியரின் அனுபவமொழிக்கு அமுத சுரபியினை ஒத்த இயல்பு இசைந்துகிடக்கின்றமையை வாசகர்கள் உணர்ந்திருக்கக்கூடும்.

எனக்குக் கூட , பக்கங்கள் நகர நகர மனம் கனத்துக்கொண்டே போனது. ஓரிடத்திலிருந்து வாசிக்க முடியாது பேருந்து /அலுவலகம் என மாறி மாறி நடுகலும் கையுமாக அலைந்தும், மன அங்கலாய்ப்புக்களின் நடுவே தான் இந்த வாசிப்பு சாத்தியமானது .

நடுகல் நாவல் மீதான உலகம் தழுவிய தமிழ் வாசகர்களின் விமர்சனங்களின் நேரெதிர் விசைகளால் உந்தப்பட்டு , நாவலைப்பெற்ற மறு நாளே வாசித்துத்தீர்க்க வேண்டும் என்ற பேராவலுடன் நூலைத்திறந்த நான் ஒரு சில பக்கங்களுக்கு அப்பால் நகரவே முடியாமல் திண்டாடி, இழப்புக்களின் வலியை மீள மீள நினைந்து இயலாமல் போய் நாவலுடன் உறங்கிப்போன ஓரிரு நாட்களும் இருக்கத்தான் செய்கின்றது.

இரத்த வாடையும் , பிணக்குவியல்களும் , சிதைந்த மனித உடல்களும் என்னை மீறி எனக்குள் கனத்த பாரத்தைத் தர, நாவலின் கதாபாத்திரங்களையும், வார்த்தைகளின் படிமங்களையும் தாண்டி மனதை வேறொரு துயர் இழுத்துச்செல்ல மீள ஒருமுறை இவையெல்லாம் நேரில் தாங்கும் வலிமை இல்லை என இதயம் கனத்துக் கொண்டேயிருந்தது.

அந்நியர்களின் இரும்புக்கோட்டைக்குள் சிதைந்தும் கருகியும் மாறுபட்ட கோலத்துடன், பெருவாழ்வின் / பெரும் சாம்ராஜ்ஜியத்தின் சுவடின்றி தடயங்களின்றி உலர்ந்துபோன காட்சிகளையும் , மக்களின் உள் மனக்காயங்கள் , வலிகளையும் கண் முன் நிறுத்தி அந்த மாபெரும் இராஜ்ஜியத்தை/ எம் மண்ணை /எம் நிலத்தை/ அனுபவிக்காத நாமெல்லாம் பாவிகள் தான் என்பதையும் உணரச்செய்யும் பெருந்துயரம் இந்த நாவலைப்படிக்கப்போகும் இளைய தலைமுறையினரிடம் தொற்றியே தீருமென்பதில் ஐயமில்லை.

மேலும் தியாகங்களின் வழி கட்டமைக்கப்பட்ட கனவு தேசம் ஒன்று எம்மிடம் இருந்ததென்பதும், மக்கள் மீதான கரிசனைகளும் தீவிரப் போக்கும் மக்களை இயற்கையுடன் இணைந்து நிம்மதியும் பெருவாழ்வும் வாழச்செய்ததென்பதும் நாவலில் பதியப்பட்டிருப்பது நாளை இதனை ஓர் வரலாற்று ஆவணமாக்கும் என்பதையும் மறுக்கமுடியாது.

உண்மையில் , கனவும் ஏக்கமும் நிறைந்த மனித வாழ்விலே நிஜங்களைக் கடந்து நிலைத்து நிற்பதென்னவோ நினைவுகள் மட்டும் தான்.

எனினும் வாழ்ந்து முடிந்த எம் மனிதர்கள் சார்ந்த நினைவுகளைக்கூடப் பேணுவதனைக் குற்றமாகப் பிரகடனப்படுத்தும் இருண்ட தேசத்தில் தான் இன்னமும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பது பெருந்துயர்.

ஆக, எம் அனைவரதும் ஒட்டுமொத்த மௌனத்தையும் தனிக்குரலாகப் பேசிமுடித்திருக்கின்றமையே தீபச்செல்வன் அண்ணாவின் நடுகல் நாவலின் மிகப்பெரும் வெற்றி .

இன்னொரு முறை உயிர்களையும் உறவுகளையும் தியாகம் செய்யும் வல்லமை எவ்வளவுக்கு எவ்வளவு எம்மிடம் இல்லை என்பது உண்மையோ அதற்கும் அதிகமாக கடந்து போன எம் வரலாற்றின் தியாகங்களையும் வீரத்தையும் நினைவுகளையும் நாம் எம் சந்ததிக்குக் கடத்த வேண்டும் என்பதும் தமது பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் , அண்ணன்களை/அக்காக்களை இழந்த தம்பிகள் தங்கைகள் நிழற்படங்களிலாவது அவர்களின் முகம் பார்த்துக் குறைதீர்க்கவேண்டும் என்பதும் எம் கனவு தான்.

நடுகல் நாவலின் எழுத்தின் முடிவு இன்று வெறுமையைத் தந்து உள்ளத்தை வலிக்கச் செய்தாலும் நாளைய ஓர் நாளில் மெய்ப்பட வேண்டும். ♥